ஜனாதிபதி தேர்தலுக்கு முந்தைய இரவு பிரணாபுக்கு சோனியா விருந்து
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் பிரணாப் முகர்ஜிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வரும் 18ம் தேதி இரவு விருந்து கொடுக்கிறார்.
குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. இதில் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜியும், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆதரவோடு முன்னாள் சபாநாயகர் பி.ஏ. சங்மாவும் போட்டியிடுகிறார்கள். இந்த தேர்தலில் பிரணாப் முகர்ஜிக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தேர்தலுக்கு முந்தைய நாள் அதாவது வரும் 18ம் தேதி இரவு பிரணாப் முகர்ஜிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விருந்து கொடுக்கிறார். காங்கிரஸ் கட்சிக்காக பல ஆண்டுகளாக உழைத்த அவரை கௌரவிக்கும் வகையில் இந்த விருந்து பிரமாண்ட முறையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
நீண்ட காலமாக கட்சியில் இரண்டாவது இடத்தில் இருந்தாலும் பிரணாப் முகர்ஜிக்கு அவர் ஆசைபட்டது போன்று பிரதமர் பதவி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் தான் காங்கிரஸ் அவரை குடியரசுத் தலைவர் வேட்பாளர் ஆக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications