யாழ்ப்பாணத்தில் மீண்டும் தலையெடுக்கிறது "தமிழீழ எல்லாளன் படை"
யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி நகரப் பகுதியில் தமிழீழ எல்லாளன் படை என்ற பெயரில் அடையாளம் தெரியாத நபர்களினால் துண்டுப்பிரசுரங்கள் நேற்று வீசப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் வீசப்பட்டிருந்த துண்டுப் பிரசுரத்தில் இடம் பெற்றிருந்ததாவது:
நடந்து முடிந்த வன்னி யுத்த அவலத்தின் பின் சிங்கள பேரினவாத அரசும் அதன் அடிவருடிகளும் எம்மினத்தின் மீது மிகப்பெரிய உளவியல் யுத்தத்தை மேற்கொண்டுள்ளார்கள். எம் இனத்தின் விடுதலை உணர்வை சிதறடிக்க எதிரியானவன் கலாச்சார சீர்கேடு எனும் ஆயுதத்தை பிரயோகிக்கின்றான் இதற்கு உறுதுணையாக பல இளைஞர் யுவதிகளும் செயற்படுகின்றார்கள்.
இதற்கு எம்மவர்கள் துணை போவதே வேதனையாக உள்ளது இனிமேலும் எதிர்வரும் காலத்தில் இப்படியான கலாசார சீர்கேடுகள், ஆட்கடத்தல்கள், சிறுவர் துஷ்பிரயோகங்கள், குழுமோதல்கள், பகிடிவதைகள் போன்றன இடம்பெறுவதற்கு அனுமதிக்க மாட்டோம்.
அத்துடன் அரச இராணுவ இயந்திரத்துடனும் ஒட்டுக்குழுக்களான துரோகக்கும்பலுடனும் நட்பை வளர்த்துக்கொண்டு உளவு சொல்பவர்களும் சமூக விரோதிகளும் அவர்களுக்கு துணை நிற்பவர்களும் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் உச்சத்தில் இருந்தபோது இலங்கை ராணுவ ஆக்கிரமிப்பில் இருந்த யாழ்ப்பாணத்தில் "எல்லாளன் படை" என்ற பெயரில் தமிழ்த் தேசிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications