சிறுதாவூர் நிலப் பிரச்சனையில் கருணாநிதி நடவடிக்கை எடுத்தாரா?: ஜி. ராமகிருஷ்ணன்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
திமுக மற்றும் அதிமுகவினரின் நிலப் பறிப்பு குறித்து நான் எழுதிய கட்டுரைக்கு விளக்கமளித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளிக்க வேண்டியுள்ளது.
திமுக மீது தனிப்பட்ட வெறுப்பு எதுவும் எங்களுக்கு இல்லை. கட்சி எடுக்கும் முடிவுகளின் அடிப்படையிலேயே மாநிலச் செயலாளரின் அறிக்கைகள், பேட்டிகள் அமைந்திருக்கும். ஆனால் இதற்கு தனிப்பட்ட முறையில் நோக்கம் கற்பிப்பது திமுக தலைமையின் நீண்டகால வழக்கமாக உள்ளது. தமிழகத்தில் திமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் மத்தியில் ஆளும் கட்சியாக உள்ளது. விலை உயர்வுக்கு காரணமான பல கொள்கை முடிவுகளை மத்திய அரசே எடுக்கிறது. இதில் திமுகவுக்கும் பங்கு உண்டு. திமுக நடத்திய மறியல் போராட்டத்தில் விலைவாசி உயர்வும் முன் வைக்கப்பட்டது என்பதை வாதத்துக்கு ஏற்றுக் கொண்டாலும், உரம், பெட்ரோல் விலை உயர்வுகளை திமுக தலைமை கண்டு கொள்ளாதது ஏன்?
சேலம் அங்கம்மாள் காலனி பிரச்னையில் திமுக அரசு நடவடிக்கை எடுத்ததாக கருணாநிதி கூறியுள்ளார். ஆனால் 2008ல் பலவந்தமாக அப்புறப்படுத்தப்பட்ட 25 குடும்பங்களும் திமுக ஆட்சி இருக்கும் வரை மீண்டும் குடியமர்த்தப்படவில்லை என்பதற்கு அவர் எந்த விளக்கமும் தரவில்லை.
தூத்துக்குடி மாவட்டம் தெய்வச்செயல்புரத்தில் 950 ஏக்கர் நிலப் பறிப்பில் திமுக, அதிமுகவைச் சேர்ந்தவர்கள் இணைந்து செயல்பட்டனர். கோவில்பட்டி ஹாக்கி மைதானத்தை மோசடியாக கிரயம் பெற்ற திமுக பிரமுகர் ஆட்சி மாறியதும் அதிமுகவில் இணைந்துவிட்டார்.
திமுக, அதிமுக ஆட்சிகளில் மணல் கடத்தல் தங்கு தடையில்லாமல் நடந்து வருகிறது. மணல் கடத்துபவர்கள் மீது கட்சி வித்தியாசம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் வலியுறுத்தி வருகிறது. மணல் கொள்ளை குறித்து கருணாநிதி எதுவும் கூறவில்லை.
சிறுதாவூர் நிலப் பிரச்னை தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி சிவசுப்பிரமணியம் தனது அறிக்கையை 28-2-2010 அன்று அளித்தார். அதன் பிறகு ஒன்றரை ஆண்டுகள் ஆட்சியில் இருந்த திமுக அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்கு திமுக தலைவர்தான் விளக்கம் அளிக்க வேண்டும்.
மனைப்பட்டா கேட்டு 25 லட்சம் ஏழைகள் போராடி வரும் நிலையில் நிலப் பறிப்பு நடப்பதை சுட்டிக் காட்டுகிறோம். இதனை தனிப்பட்ட விமர்சனம் என திசை திருப்புவதை மார்க்சிஸ்ட் ஊழியர்களும், தமிழக மக்களும் புரிந்து கொள்வார்கள் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications