குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஹமீத் அன்சாரியை மமதா ஆதரிக்கமாட்டார்

குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜியை நிறுத்துவதற்கும் முதலில் எதிர்ப்புத் தெரிவித்திருந்தவர் மமதா பானர்ஜி. பிரணாப்புக்குப் பதிலாக அப்துல்கலாம், சோம்நாத் சட்டர்ஜி, மன்மோகன்சிங் ஆகியோரை நிறுத்தலாம் என்றும் கூறியிருந்தார். பின்னர் அப்துல்கலாமை நிறுத்த போராடிப் பார்த்தார். ஆனால் அவரது முயற்சி பலிக்கவில்லை. மேலும் குடியரசுத் தலைவர் தேர்தலில் யாரை ஆதரிப்போம் என்பதை தேர்தலுக்கு 72 மணிநேரத்துக்கு முன்பு அறிவிப்பதாகவும் கூறிவிட்டார்.
இந்நிலையில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஹமீத் அன்சாரியையே மீண்டும் நிறுத்தலாம் என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தீர்மானித்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக பல்வேறு கட்சிகளிடமும் காங்கிரஸ் கட்சி பேசி வருகிறது. ஆனால் திரிணாமுல் காங்கிரஸிடம் பேசப்படவில்லை. அதே நேரத்தில் ஹமீத் அன்சாரி நிறுத்தப்பட்டால் திரிணாமுல் காங்கிரஸ் அவரை ஆதரிக்காது என்றும் கூறப்படுகிறது. கோபால் கிருஷ்ண காந்தி அல்லது கிருஷ்ணா போஸ் ஆகிய இருவரில் ஒருவரை குடியரசு துணைத் தலைவராக நிறுத்தலாம் என்பது திரிணாமுல் தலைவர் மமதாவின் நிலைப்பாடு.
குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வில் மமதா மூட்டிய கலகத்தால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் தேர்விலும் மமதா பரபரப்பை உருவாக்குவாரோ?












Click it and Unblock the Notifications