சிறப்பு நிதி எதிரொலி- ஹமீத் அன்சாரியை மீண்டும் துணை ஜனாதிபதியாக்க நிதிஷ்குமார் ஆதரவு?
பீகார்:குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் மீண்டும் ஹமீத் அன்சாரியை நிறுத்தும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முடிவுக்கு ஐக்கிய ஜனதா தளத் தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் ஆதரவு தெரிவிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் முக்கிய கட்சியாக இருந்து வருகிறது. இருப்பினும் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளரான பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க முடிவு செய்துள்ளது. இதையடுத்து ஐக்கிய ஜனதா தளம் ஆளும் பீகார் முதல்வருக்கு சிறப்பு நிதியாக பல ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
இந்நிலையில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் மீண்டும் ஹமீத் அன்சாரியை நிறுத்துவது என ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தீர்மானித்திருக்கிறது. இதற்காக பல்வேறு கட்சிகளிடமும் ஆதரவைக் கோரி வருகிறது. துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலிலும்கூட ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளரான ஹமீத் அன்சாரியையே பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளத் தலைவருமான நிதிஷ்குமார் ஆதரிப்பார் என்றே கூறப்படுகிறது.
அதிகாரப்பூர்வமாக ஹமீத் அன்சாரியை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அறிவித்த பிறகு தமது நிலைப்பாட்டை நிதிஷ்குமார் அறிவிக்கக் கூடும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications