லடாய் தலைவர்களை ஒன்றுசேர்த்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஜெகதீஷ் ஷெட்டர்
பெங்களூர்: கர்நாடக மாநில பாரதிய ஜனதாவில் நேற்று அடித்துக் கொண்டிருந்த அத்தனை பெருந்தலைகளையும் ஒன்று சேர்த்துக் கொண்டு ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியிருக்கிறார் ஜெகதீஷ் ஷெட்டர்.
கர்நாடக ஆளுநர் பரத்வாஜை இன்று சந்தித்த சதானந்த கவுடா முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை முறைப்படுத்திக் கொடுத்தார். ஆனால் அதற்கு முன்னதாக சதானந்த கவுடாவின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நூற்றுக் கணக்கில் குவிந்த ஆதரவாளர்கள் அவரை ராஜினாமா செய்யப் போகவிடாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஒருகிலோ மீட்டர் நீளத்துக்கு சதானந்த கவுடாவின் வாகனத்தை தொடர்ந்தும் அவரது ஆதரவாளர்கள் வழிமறித்துக் கொண்டே போக ஒருகட்டத்தில் போலீஸ் தலையிட்டு வழிஏற்படுத்திக் கொடுத்தது.
பின்னர் ஆளுநர் பரத்வாஜை நேரில் சந்தித்து தமது ராஜினமா கடிதத்தை முறைப்படிக் கொடுத்தார். அவர் ராஜினாமா கடிதம் கொடுத்த பின்னர் அரை மணி நேரம் கழித்து மாநில பாஜக தலைவர் ஈஸ்வரப்பா, முன்னாள் முதல்வர் எதியூரப்பா, அனந்த குமார், சதானந்த கவுடா ஆகியோருடன் இணைந்து ஜெகதீஷ் ஷெட்டர் ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
இதை ஆளுநரும் ஏற்றுக் கொண்டு அழைப்புவிடுத்திருப்பதாக கர்நாடக மாநில ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை ஜெகதீஷ் ஷெட்டர் முதல்வராகப் பதவியேற்கிறார். அவர் மட்டும்தான் நாளை பதவியேற்கிறாரா? இல்லை அவருடன் வேறு சிலரும் அமைச்சர்களாக பதவியேற்கின்றனரா? என்பது பற்றி அதிகாரப்பூர்வமாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications