சேட்டை செய்த 3 வயது சிறுமிக்கு கொள்ளிக்கட்டையால் சூடு போட்ட அங்கன்வாடி ஊழியைகள்
தேனி: கம்பம் அருகே உள்ள அங்கன்வாடியில் சேட்டை செய்ததால் 3 வயது சிறுமிக்கு கொள்ளிக்கட்டையால் சூடுபோட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம், கம்பம் அருகே சுருளிப்பட்டி 1வது வார்டு காலனி பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் அதே பகுதியைச் சேர்ந்த சசிக்குமார், முருகேஸ்வரி தம்பதியின் மகள் ரோசினி (3) சேர்க்கப்பட்டிருந்தாள். சிறுமி கடந்த சில நாட்களாகவே மையத்திற்கு வந்தால் சேட்டை செய்து, அழுது கொண்டே இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து ரோசினியின் சேட்டையைக் குறைத்து, அழுகையை நிறுத்த அம்மையத்தின் அமைப்பாளர் பாரதி மற்றும் உதவியாளர் ஜெயா ஆகியோர் சேர்ந்து கொள்ளிக்கட்டையை எடுத்து கொஞ்சம் கூட ஈவு, இரக்கமின்றி சிறுமியின் கை, கால்களில் சூடு வைத்ததாகத் தெரிகிறது. ரோசியின் கை, கால்களில் சூடு வைத்த அடையாளத்தைப் பார்த்த தாய் முருகேஸ்வரி அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து மைய உதவியாளர் ஜெயாவிடம் கேட்டதற்கு சிறுமி கீழே விழுந்துவிட்டதாகத் தெரிவித்தார்.
ஆனால் சிறுமியிடம் கேட்டதற்கு அவள் நடந்த உண்மையைச் சொல்லி அழுதாள். உடனே இது குறித்து ரோசியின் பெற்றோர் ராயப்பன்பட்டி போலீசில் புகார் கொடுத்தனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்த ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் கலைச்செல்வராஜன், இப்ராகிம் மற்றும் மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் நாகபிரபா ஆகியோர் அந்த அங்கன்வாடி மையத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜெயாவும், பாரதியும் சேர்ந்து சிறுமிக்கு சூடு வைத்தது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த 2 பேரையும் சஸ்பெண்ட் செய்தனர்.
இது குறித்து தேனி மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி கூறுகையில்,
சிறுமிக்கு சூடு வைத்த சம்பவம் குறித்து விரிவான அறிக்கை அளிக்குமாறு குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலருக்கு உத்தரவிட்டுள்ளேன். முதல்கட்டமாக அந்த அங்கன்வாடி மையத்தில் பணிபுரிந்த 2 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications