ஜோலார்பேட்டையில் தடம் புரண்டது சரக்கு ரயில்-சென்னை ரயில்கள் தாமதம்
ஜோலார்பேட்டை: ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு சிமெண்ட் ஏற்றி சென்ற சரக்கு ரயில், ஜோலார்பேட்டை அருகே தடம் புரண்டதால், சென்னைக்கு வரும் ரயில்கள் தாமதமாக வந்து சேர்ந்தன.
ஆந்திர மாநிலம் எறகுண்டாவில் இருந்து சிமெண்டு மூட்டைகளை ஏற்றி கொண்டு கோட்டயத்திற்கு சென்ற சரக்கு ரயில், நேற்று இரவு ஜோலார்பேட்டை வழியாக சென்றது. அப்போது ஜோலார்பேட்டையை அடுத்த பக்கிரிதர்கா பகுதியில் நள்ளிரவு 1.50 மணியளவில், சரக்கு ரயில் யார்டு தண்டவாளத்தில் இருந்து மெயின் தண்டவாளத்திற்கு மாறியது.
அப்போது சரக்கு ரயிலின் 10வது பெட்டி எதிர்பாராதவகையில் தடம் புரண்டது. இதனை கவனித்த ரயில் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்திவிட்டு, ஜோலார்பேட்டை ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.
சென்னை செல்லும் மார்க்கத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு நின்றதால், அவ்வழியான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சரக்கு ரயில் பெட்டியை ரயில் பாதையில் இருந்து நீக்கும் பணியில் ரயில்வே பணியாளர்கள் ஈடுபட்டனர்.
இதனால் கோவையில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த சேரன் எக்ஸ்பிரஸ் ரயில், மொளகரம்பட்டியில் நிறுத்தப்பட்டது. ஆலப்புழை எக்ஸ்பிரஸ் ரயில் திருப்பத்தூரில் நிறுத்தப்பட்டது. பாட்னா எக்ஸ்பிரஸ், ஜோலார்பேட்டை ஜங்ஷனில் நிறுத்தப்பட்டது.
அதிகாலை வரை தொடர்ந்த மீட்பு பணி, அதிகாலை 4.30 மணிக்கு முடிவடைந்து, ரயில் பாதை சீரானது. இதனையடுத்து எக்ஸ்பிரஸ் ரயில்கள் 2 முதல் 3 மணிநேரம் தாமதமாக சென்னை சென்ட்ரலை வந்தடைந்தன.
மேலும் ஏலகிரி, திருவனந்தபுரம், பெங்களூர், திருப்பதி செல்ல இருந்த ரயில்களும் தாமதமாக இயக்கப்பட்டது. சரக்கு ரயில் தடம் புரண்ட காரணம் குறித்து, ரயில்வே அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். ரயில்கள் 3 மணிநேரம் தாமதமாக இயக்கப்பட்டதால், பயணிகள் பாதிக்கப்பட்டனர்.