கிழக்கு சீனக் கடலில் அதிகரிக்கும் மோதல் போக்கு- சீனாவின் ரோந்து கப்பல்களுக்கு ஜப்பான் எதிர்ப்பு
டோக்கியோ: கிழக்கு சீனக் கடற்பரப்பில் சர்ச்சைக்குரிய தியாவ்யூ தீவுகள் அருகே சீனா ரோந்து கப்பல்களை நிறுத்தியுள்ளதற்கு ஜப்பான் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
கிழக்கு சீனக் கடற்பரப்பில் சென்காகு அல்லது தியாவ்யூ என்ற தீவுகளுக்கு ஜப்பானும் சீனாவும் உரிமை கோரி வருகின்றன. தென்சீனக் கடல் போன்றே கிழக்கு சீனக் கடற்பரப்பும் தமக்கே சொந்தம் என்கிறது சீனா.ஆனால் ஜப்பானோ அது தங்கள் கடற்பரப்பில் இருக்கிறது என்கிறது. எரிவாயு வளம் அதிகம் இருப்பதாகக் கருதப்படும் இத்தீவுகள் மீது இருநாடுகளுமே கண் வைத்திருக்கின்றன. இத்தீவுகள் தற்போது தனியார்வசம் இருப்பதாகவும் அவற்றை தாம் வாங்கப் போவதாகவும் ஜப்பான் அண்மையில் கூறியிருந்தது. இதற்கும் சீனா எதிர்ப்புத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இத்தீவுகள் அருகே சீனாவின் 3 ரோந்து கப்பல்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. இதற்கு ஜப்பான் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.ஆனால் சீனர்களின் மீன்பிடி படகுகளுக்குப் பாதுகாப்பாகவே ரோந்து கப்பல்கள் நிறுத்தப்பட்டிருப்பதாக சீனா கூறியுள்ளது.