திருப்தியுடன் திரும்பிச் செல்கிறேன்... பிரதீபா பாட்டீல் நெகிழ்ச்சி

இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் பிரதீபா பாட்டீல். அப்போது அவர் கூறுகையில், திருப்திகரமான மன நிலையுடன்தான் எனது பதவியிலிருந்து நான் விடை பெறுகிறேன். கடந்த ஐந்து ஆண்டுகளில் நான் எடுத்த பல நடவடிக்கைகள், குறிப்பாக பெண்கள் மற்றும் விவசாயிகள் தொடர்பான பல முடிவுகள் எனக்குத் திருப்தி அளிக்கிறது.
எனது வெளிநாட்டுப் பயணங்கள் குறித்த சர்ச்சை தேவையற்றது. தவறான தகவல்களின் அடிப்படையில் கிளப்பப்பட்டது. இந்தியாவுக்கும், வெளிநாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்த இதுபோன்ற பயணங்கள் தேவை என்று மத்திய அரசு விரும்பியதாலும், அதுபோன்ற சந்தர்ப்பங்களிலும்தான் நான் வெளிநாடுகளுக்குச் சென்றேனே தவிர என் விருப்பத்துக்காக செல்லவில்லை.
வேகமாக மாறி வரும் உலகில் இதுபோன்ற வெளிநாட்டுப் பயணங்கள் தவிர்க்க முடியாதது. அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல், சமூக, பொருளாதார, கலாச்சார ரீதியாகவும் ஒவ்வொரு நாடும் பிற நாட்டுடன் உறவை வலுப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில், இந்தியா சமீபத்தில் நிரந்தரமல்லாத உறுப்பு நாடாக தேர்வானது. இதுபோன்றவற்றுக்கு பிற நாடுகளுடன் நெருக்கமான உறவை வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும் என்றார் பிரதீபா பாட்டீல்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் பிரதீபா பாட்டீல், 22 நாடுகளுக்கு 12 சுற்று் பயணங்களை மேற்கொண்டார். நான்கு கண்டங்களுக்கு அவர் போயுள்ளார். அவரது வெளிநாட்டுப் பயணங்களால் அரசுக்கு ரூ. 205 கோடி செலவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுதான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது.












Click it and Unblock the Notifications