தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி டீன் எட்வின் ஜோவுக்கு பிடிவாரண்ட்
ஈரோடு: விபத்து தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் எட்வின் கோவுக்கு எதிராக ஈரோடு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் ஆர்.என். புதூரைச் சேர்ந்தவர் இலியாஸ். கடந்த 2007ம் ஆண்டு ஆர்.என். புதூர் சாலையில் நடந்து சென்றபோது ஈரோடு பெரிய சேமூரைச் சேர்ந்த சங்கர் என்பவரின் பைக் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த இலியாஸ் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகி்ச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அப்போது கோவை அரசு மருத்துவமனையில் டாக்டராக இருந்த எட்வின் ஜோ இலியாஸ் உடலை பிரேத பரிசோதனை செய்தார். இந்த விபத்து தொடர்பான வழக்கு ஈரோடு மாவட்ட தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் சாட்சி அளிக்க டாக்டர் எட்வின் ஜோவுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. பல முறை சம்மன் அனுப்பியும் அவர் வராததால் மாஜிஸ்திரேட் நம்பிராஜன் டாக்டருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்தார். டாக்டர் எட்வின் ஜோ தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி டீனாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications