திருச்சுழி அருகே கலவரம்: தேக்கு தோப்புக்கு தீ- 60 பேர் கைது
திருச்சுழி: திருச்சுழி அருகே ஏற்பட்ட கலவரத்தில் அந்த வழியாக வந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன், தேக்கு தோப்பு ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கட்டங்குளம் கிராமத்தில் யாதவ சமுதாயத்தைச் சேர்ந்த வீரன் அழகுமுத்துக்கோன் நினைவிடம் உள்ளது. நேற்று அவரது நினைவு நாள் என்பதால் இந்த நினைவிடத்திற்கு இராமநாதபுரம், சிவகங்கை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் திருச்சுழி, அருப்புக்கோட்டை வழியாகச் சென்று கொண்டு இருந்தது.
வாகனங்களில் சென்ற சிலர் திருச்சுழி அருகே குலசேகரநல்லூரில் வாகனங்களை நிறுத்தி அங்கு உள்ள ஒரு டாஸ்மார்க் கடையில் மது அருந்திவிட்டு, தண்ணீர் பாக்கெட்டுகளை அந்த வழியாகச் சென்ற வாகனங்கள் மீது எறிந்துள்ளனர். இதை அருகில் வசிக்கும் கிராமத்தினர் வந்து தடிக்கேட்டனர். இதனால் இரு பிரிவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கலவரமாக வெடித்தது.
இதில் அந்த ரோட்டில் சென்ற 10க்கும் மேற்பட்ட பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டது. அந்த வழியாகச் சென்ற இருசக்கர வாகனத்திற்கும், அருகில் உள்ள தேக்கு மரத் தோப்பிற்கும் தீ வைக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த அருப்புக்கோட்டை டி.எஸ்.பி.முருகேசன், ஆர்.டி.ஓ.குணசேகரன், தாசில்தார் வேலுசேகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கிருந்தவர்களை சமாதானம் செய்தனர். ஆனால் அதிகாரிகள் பேச்சை கேட்க யாரும் தயாராக இல்லை.
இதனையடுத்து மாவட்ட எஸ்.பி.நஜ்மல்கோதா உத்தரவின் பேரில் அதிரடிப்படை போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை விரட்டியடித்தனர். கலவரத்தில் ஈடுபட்ட 60க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
இதனால் அருப்புக்கோட்டை திருச்சுழி பாதையில் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் கலவரம் ஏற்படாமல் இருக்க அந்த பகுதியில் ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications