கரண்ட் கிடையாது, தண்ணீர் கிடையாது, லீவும் கிடையாது... இந்தியாவுக்கு தப்பி வந்த பாக். வீரர்
பூன்ச்: பாகிஸ்தான் ராணுவ வீரர் ஒருவர் இந்தியாவுக்குள் தப்பி வந்துள்ளார். இந்தியாவிடம் புகலிடமும் கோரியுள்ளார். அவரை ராணுவம் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூன்ச் மாவட்டம் கெர்னி பிரிவில் இன்று காலை பாகிஸ்தான் ராணுவ வீரர் ஒருவரை நமது ராணுவ வீரர்கள் பிடித்தனர். பாகிஸ்தான் ராணுவ வீரரிடம் சோதனை நடத்தியதில் அவரிடமிருந்து எந்தவிதமான ஆயுதமும் சிக்கவில்லை.
அவரது பெயர் ஆரிப் அலி. பாகிஸ்தான் ராணுவத்தின் எல்லைப் புற ராணுவப் பிரிவைச் சேர்ந்தவர். அவரிடம் விசாரணை நடத்தியபோது, எல்லைப் புற ராணுவ வீரர்கள் பெரும் விரக்தியில் உள்ளனர். அவர்கள் தங்கும் இடத்தில் உரிய மின்சார சப்ளை இருப்பதில்லை, சாப்பாடு, குடிநீர் என எதுவும் சரியாக இல்லை. லீவு கூட கொடுப்பதில்லை. இதனால் ஏற்பட்ட விரக்தியில் தான் தப்பி வந்து விட்டதாகவும், தனக்கு இந்தியாவில் புகலிடம் தேவை என்றும் ஆரிப் அலி கூறியுள்ளார்.
ஆரிப் அலி, எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர் ஆவார்.
ஆரிப் அலியை மீண்டும் பாகிஸ்தானுக்கே அனுப்பி வைக்கப் போவதாக நமது ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications