'இந்த செல்போனுக்குரிய பெண் இறந்து போய் விட்டார்...'

நியூயார்க்கின் க்வீன்ஸ் பகுதியில் வசித்து வந்தவர் ராஜ்வீந்தர் கெளர். 26 வயதாகும் இவர் கடந்த ஞாயிற்றுக்கிழம மாலையில் வீட்டை விட்டுக் கிளம்பிப் போனார். ப்ரூக்ளினில் உள்ள ஒரு ஆதரவற்றோர் மையத்தில் சேவை செய்வதற்காக அவர் புறப்பட்டுப் போனார்.
அதன் பின்னர் அவர் வரவில்லை. இந்த நிலையில், இரவு, ராஜ்வீந்தர் கெளரின் சகோதரி குர்பிரீத் கெளரின் செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அது ராஜ்வீந்தர் கெளரின் செல்போனிலிருந்து வந்தது. அந்த மெசேஜில், இந்த போனுக்குரியவர் இறந்து போய் விட்டார் என்று கூறப்பட்டிருந்தது. இதைப் பார்த்து முதலில் யாரோ வேடிக்கை செய்கிறார்கள் என்று நினைத்துள்ளார் குர்பிரீத் கெளர்.ஆனால் பிறகுதான் அதன் விபரீதம் புரிந்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து குர்பிரீத் கூறுகையில், இது எங்களை பெரும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. என்ன நடக்கிறது என்று தெரியவில்லை என்றார்.
ராஜ்வீந்தர் கெளரின் மைத்துனர் குல்விந்தர் பிந்தர் கூறுகையில், நாங்கள் பெரும் பதட்டமாக உள்ளோம். ராஜ்வீந்தர் இப்படியெல்லாம் செய்தி அனுப்பக் கூடிய ஆள் இல்லை. எனவே அவருக்கு ஏதோ நடந்திருப்பதாக பயப்படுகிறோம்.
அன்றைய இரவில் யாரோ ஒருவருடன் அவர் மோசமான அனுபவத்தை சந்தித்திருக்க வேண்டும் என்று அஞ்சுகிறோம். அவரால் ராஜ்வீந்தருக்கு ஆபத்து நேரிட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம் என்றார்.
போலீஸ் தரப்பில் கூறுகையில், ப்ரூக்ளினிலிருந்துதான் இந்த மெசேஜ் அனுப்பப்பட்டிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு போன் சுவிட்ச் ஆப் ஆகி விட்டது என்று தெரிவித்துள்ளனர். மேலும் துப்பு ஏதும் கிடைக்கவில்லையாம்.
ராஜ்வீந்தர் தனது ஏடிஎம் கார்டு அல்லது கிரெடிட் கார்டு என எதையும் உபோயகிக்கவில்லை. அவரது இமெயில்களை பரிசோதித்துப் பார்க்க போலீஸார் தற்போது முடிவு செய்துள்ளனர். அதற்காக கோர்ட் அனுமதியை எதிர்பார்த்துள்ளனர். இமெயில் மூலம் ஏதாவது துப்பு துலங்கலாம் என அவர்கள் நம்புகின்றனர்.
அதேசமயம், ராஜ்வீந்தர் ஏதாவது ஒரு தீவிர மத அமைப்பில் சேர்ந்திருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகப்படுகின்றனர். ஆனால் அதை ராஜ்வீந்தரின் குடும்பத்தினர் மறுக்கின்றனர்.
இதற்கிடையே, தான் காணாமல் போவதற்கு முன்பு தனக்குச் சொந்தமான பல பொருட்களை இபே இணையதளத்தின் மூலம் ராஜ்வீந்தர் விற்றுள்ளார் என்ற புதிய தகவலும் கிடைத்துள்ளது. இதற்கும், காணாமல் போனதற்கும் சம்பந்தம் ஏதும் இருக்கிறதா என்பது தெரியவில்லை.
தற்போது ராஜ்வீந்தரின் புகைப்படங்கள் அடங்கிய போஸ்டர்களை பல்வேறு பகுதிகளில் ஒட்டி குடும்பத்தாரும் தீவரி தேடுதல் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ராஜ்வீந்தர் குறித்த தகவல் தெரிவிப்போருக்கு 1000 டாலர் பரிசு தரப்படும் என்றும் காவல்துறை தரப்பில் அறிவிக்கப்ட்டுள்ளது.
உங்களுக்கு ராஜ்வீந்தர் குறித்த தகவல் ஏதும் தெரிந்தால் இந்த இணையதளத்தில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.












Click it and Unblock the Notifications