'சைபர்' படையை உருவாக்கும் இந்திய கடற்படை!
டெல்லி: எதிரிகள் இப்படித்தான் வருவர்கள் என்று கூற முடியாது. எப்படியெல்லாமோ வரக் கூடிய அளவுக்கு தற்போதைய தகவல் தொடர்பு காலம் படு வேகமாக உள்ளது. எனவே இதை சமாளிக்கும் வகையில் சைபர் படைப் பிரிவு ஒன்றை இந்திய கடற்படை நிர்மானிக்கவுள்ளது. அதாவது தகவல் தொழில்நுட்ப என்ஜீனியர்கள், பட்டதாரிகளை தனது படைப் பிரிவில் இணைத்து புதிய சைபர் பிரிவை உருவாக்குகிறது இந்திய கடற்படை.
இந்திய கடற்படை தற்போது பல்வேறு வகையான பலத்துடன் திகழ்கிறது என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் சைபர் கிரிமினல்களின் தொல்லை அதிகரித்து வரும் நேரம் இது என்பதால், அதையு்ம் சமாளிக்கத் தேவையான ஆயத்தங்களில் குதித்துள்ளது கடற்படை.
அதன்படி தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், பட்டதாரிகளை தனது கடற்படைப் பிரிவில் அதிகாரிகளாக சேர்க்கவுள்ளது கடற்படை. இந்தப் புதிய பிரிவில் இடம் பெறும் அதிகாரிகள், இந்திய கடற்படையின் முக்கிய டேட்டாக்களைப் பாதுகாக்கும் பணியில் முக்கியக் கவனம் செலுத்துவார்கள். மேலும் இந்திய கடற்படை தளத்தை ஹேக் செய்யும் முயற்சிகளை தடுப்பதிலும் கவனமுடன் இருப்பார்கள்.
சமீபத்தில் சீன மற்றும் பாகிஸ்தானிய ஹேக்கர்கள், இந்திய கடற்படையின் முக்கிய டேட்டாக்களை ஹேக் செய்ய முயற்சிப்பதா வந்தத் தகவலைத் தொடர்ந்து இந்த புதிய சைபர் பிரிவை உருவாக்குவதில் தீவிரம் காட்டவுள்ளது கடற்படை.
சமீபத்தில், விசாகப்பட்டனத்தில் உள்ள கிழக்குப் பிராந்திய கடற்படை தளத்தில் வைரஸ் பாதிப்புடன் கூடிய பென் டிரைவ்கள் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக 6 கடற்படை அதிகாரிகள் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முக்கிய கம்ப்யூட்டர்களை செயலிழக்க வைக்க அவர்கள் முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதேபோல மும்பையில், மேற்கு பிராந்திய கடற்படைப் பிரிவைச் சேர்ந்த 2 அதிகாரிகள், இந்திய போர்க்கப்பல்களின் புகைப்படங்கள், தகவல்கள் உள்ளிட்டவற்றை பேஸ்புக்கில் போட்ட குற்றச்சாட்டில் சிக்கி விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில்தான் சைபர் பிரிவை உருவாக்குவதில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது கடற்படை.
இதுகுறித்து மூத்த கடற்படை அதிகாரி ஒருவர் கூறுகையில், தற்போது எல்லாமே இன்டர்நெட் அடிப்படையிலானதாக மாறி வருகிறது. முக்கிய டேட்டாக்கள், தகவல்களுக்கு ஹேக்கர்கள் ரூபத்தில் பெரும் சவால்கள் உள்ளன. மேலும் கடற்படையின் போர்க்கப்பல்கள் உள்ளிட்டவற்றை ஒருங்கிணைத்து அதைக் கட்டுப்படுத்துவது, நிர்மானிப்பதும் சவாலுக்குரியதாக மாறியுள்ளது.
இதைக் கருத்தில் கொண்டே தற்போது புதிய சைபர் பிரிவை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்தப் பிரிவானது கப்பல்கள் ஒருங்கிணைப்பு மட்டுமல்லாமல், சைபர் கிரிமினல்களிடமிருந்து நமது கடற்படை கட்டமைப்பைக் காக்கும் பணியிலும் ஈடுபடுவார்கள்.
இந்தப் புதிய பிரிவில் பிடெக், எம்டெக், பிஎஸ்சி, எம்எஸ்சி, பிசிஏ, எம்சிஏ படித்தவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர். இவர்களுக்கு கேரளாவில் உள்ள எழிமலா, இந்திய கடற்படை அகாடமியில் பயிற்சி அளிக்கப்படும்.












Click it and Unblock the Notifications