தென்சீனக் கடலுக்கு உரிமை கோரும் விவகாரத்தால் மோதல்- முடிவேதும் எடுக்காமலேயே முடிந்தது ஆசியான் மாநாடு
பினோம்பென்: தென்சீனக் கடல் விவகாரம் கம்போடியாவில் நடைபெற்ற ஆசியான் நாடுகளின் மாநாட்டில் கடுமையாக எதிரொலித்தது. இந்த விவகாரத்தால் ஆசியான் மாநாட்டின் 45 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக அனைத்து நாடுகளும் இணைந்து வெளியிடும் கூட்டறிக்கை வெளியிடப்படவில்லை.
கம்போடிய தலைநகர் பினோம்பென்னில் 10 தென்கிழக்கு ஆசிய நாடுகளை உள்ளடக்கிய "ஆசியான்" அமைப்பின் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் நேற்று சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், தென் சீனக் கடற்பரப்புக்கு உரிமை கோரும் விவகாரத்தில் அமைதியான முறையில் தீர்வு காணப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
மாநாட்டில் இறுதிநாளான இன்றும் தென்சீனக் கடல் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. வழக்கம்போல தென்சீனக் கடற்பரப்பு முழுவதுமே தங்களுக்குச் சொந்தமானது என்று சீனா உரிமை கொண்டாடியது. இதை பிலிப்பைன்ஸ் கடுமையாக நிராகரித்தது. சீனாவின் நட்பு நாடான கம்போடியாவோ பிலிப்பைன்ஸ் கருத்தை எதிர்த்தது. இதனால் ஆசியான் மாநாட்டில் சீனா, கம்போடியா ஒரு அணியாகவும் வியட்நாம்,பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 8 நாடுகள் ஓரணியாகவும் நின்றன.
இதனால் இம்மாநாட்டின் முடிவில் வழக்கம்போல அனைத்து நாடுகளும் இணைந்து வெளியிடும் கூட்டறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. 45 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக இத்தகைய கூட்டறிக்கையை ஆசியான் மாநாடு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications