தேசிய ஊரக குடிநீர் திட்டத்துக்கான நிலுவைத் தொகை கோரி மத்திய அமைச்சருக்கு ஜெ. கடிதம்
சென்னை: தமிழ்நாட்டுக்கான தேசிய ஊரக குடிநீர் திட்டத்துக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை உடனே விடுவிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
2012-13ம் ஆண்டுக்கான தேசிய ஊரக குடிநீர் திட்டம் குறித்த ஜூலை 4ம் தேதியிட்ட கடிதத்தில் தெரிவித்தபடி, 31.3.12ம் தேதிப்படி முடிவடைந்த ஆண்டில் நிதி ஒதுக்கீட்டுத் தொகையாக ரு.243.86 கோடி உள்ளது. இதில் தமிழகம் ரூ. 58.33 கோடியை மார்ச் 3ல் பெற்றுள்ளது. செயல்பாட்டு அடிப்படையில் ஊக்கத் தொகையாக ரூ. 98.20 கோடி கூடுதலாக ஏப்.4ம் தேதி பெறப்பட்டுள்ளது. இந்த நிதியில் 60%க்கும் அதிகமாக சிறப்பான வகையில் தமிழகம் செலவழித்து நடவடிக்கை மேற்கொண்டதற்கான தொகை இது. இதற்கு அடுத்து பேரிடர் நிதியில் இருந்து ரூ.12.24 கோடி ஏப்.4ல் பெறப்பட்டுள்ளது. இது வரை 168.77 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது.
இதில், ஏப்.1ல் இருந்து தேசிய ஊரக குடிநீர் திட்டத்துக்கு தமிழகம் ரூ. 87.45 கோடி திட்டப்பணியில் செலவழித்துள்ளது. முறையான தணிக்கையுடன் திட்டப்பணிகளில் நிதியை சிறப்பாகக் கையாண்டுள்ளது தமிழகம். தமிழகத்தின் திட்டப்பணிகள் குறித்து நீங்கள் கூட முதல்வர்கள் மாநாட்டில் பாராட்டு தெரிவித்துள்ளீர்கள். இந்த முறையானது மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணம் என்று குறிப்பிட்டிருந்ததை நினைவூட்டுகிறேன்.
இத்தகைய பின்னணியில், தமிழ்நாட்டுக்கு விடுவிக்கப்பட வேண்டிய ரூ. 138.58 கோடி ரூபாயை தாமதம் இன்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications