3 தொழிற்நுட்ப பயிற்சி மையங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ஜெ. ரூ.3 கோடி நிதி
சென்னை: திண்டுக்கல், விருத்தாசலம் மற்றும் கிண்டியில் உள்ள தொழிற்நுட்ப பயிற்சி மையங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முதல்வர் ஜெயலலிதா ரூ.3 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
பொருளாதாரத்தில் ஒரு நாடு உயர வேண்டும் எனில் ஏட்டுக் கல்வியுடன் தொழிற்கல்வியும் அவசியம் என்பதால் தொழிற்கல்வியை மாணவ மாணவியர் பெறும் வகையில் பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.
சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்குத் தேவையான தொழில்நுட்ப பணியாளர்களை உருவாக்கும் வகையில் விருத்தாசலத்தில் அமைந்துள்ள பீங்கான் தொழில்நுட்ப பயிற்சி மையத்தின் மூலம் மூன்றரை ஆண்டு கால "பீங்கான் தொழில் நுட்பம்'' பட்டயப்படிப்பு, திண்டுக்கல்லில் உள்ள கருவி பொறியியல் பயிலகத்தின் மூலம் மூன்று ஆண்டு கால அச்சு மற்றும் பொறியியல் படிப்பு, சென்னையிலுள்ள அரசினர் தொழில்நுட்ப பயிற்சி நிலையத்தின் மூலம் மூன்று ஆண்டு கால அச்சு மற்றும் கருவி பொறியியல் மற்றும் குளிர்பதனம் மற்றும் காற்றுப் பதனவியல் படிப்பு ஆகியவைகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன.
இப்பயிலகங்களில் பயிற்சி பெற்ற மாணவர்கள் பல்வேறு முன்னணி நிறுவனங்களால், இப்பயிற்சி நிறுவனங்களில் நடத்தப்படும் வளாக நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு நல்ல வேலைவாய்ப்பினை பெற்றுள்ளனர். அவர்களில் சிலர் வெளிநாடுகளிலும் பணியாற்றி வருகிறார்கள்.
இந்த மூன்று அரசு பயிற்சி நிறுவனங்கள் துவங்கப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ளதைக் கருத்தில் கொண்டும், இதனால் இந்த நிறுவனங்களில் உள் கட்டமைப்பு வசதிகள், அகில இந்திய தொழில்நுட்பக் குழு தெரிவிக்கின்ற நடைமுறைகளுக்கு ஏற்பவும், இம்மையங்களில் பயிலும் மாணவர்களின் தேவைகளுக்கு ஏற்பவும் மாற்றியமைக்கப்பட வேண்டும்.
இதை கருத்தில் கொண்டு, இவற்றின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக விருத்தாசலத்திலுள்ள பீங்கான் தொழில் நுட்ப பயிற்சி மையத்திற்கு 85 லட்சம் ரூபாயும், திண்டுக்கல்லில் உள்ள கருவிப் பொறியியல் மையத்திற்கு 95 லட்சம் ரூபாயும், சென்னை கிண்டியிலுள்ள தொழில்நுட்ப பயிற்சி மையத்திற்கு 1 கோடியே 20 லட்சம் ரூபாயும் என மொத்தம் 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அரசின் இந்த நடவடிக்கை மூலம் இம்மையங்களில் ஏற்படுத்தப்படும் உள்கட்டமைப்பு வசதிகள் இங்கு பயிலும் மாணவர்கள் கல்வி கற்பதற்கான நல்ல சூழலை ஏற்படுத்தித் தரும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.