புதுவையில் விவசாய பல்கலைக்கழகம்: பட்ஜெட்டில் ரங்கசாமி அறிவிப்பு
புதுச்சேரி: புதுச்சேரி சட்ட சபையில் முதல்வரும், நிதியமைச்சருமான ரங்கசாமி இன்று (ஜூலை 16) பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
வடமாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்றதால் புதுவை மாநிலத்திற்கான நடப்பாண்டு நிதியை திட்டக்குழு கடந்த மார்ச் மாதம் ஒதுக்கீடு செய்யவில்லை. இதனால் புதுவை சட்டசபையில் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. இதற்கு பதிலாக மார்ச் மாதம் கூடிய பட்ஜெட் கூட்டத் தொடரில் அரசின் 4 மாதங்களுக்கான செலவினங்களுக்கு மட்டும் ஒப்புதல் பெறப்பட்டது.
இந்த நிலையில் கடந்த மாதம் 25ம் தேதி மத்திய திட்டக்குழு புதுச்சேரி மாநிலத்திற்கு ரூ.3,000 கோடியை ஒதுக்கியது. இதையடுத்துப் பட்ஜெட் தயாரிக்கும் பணி நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக இன்று (ஜூலை 16 ) மீண்டும் சட்டசபை கூடியது. இன்று பகல் 12.15 மணி அளவில் புதுவை சட்டசபையில் முதல்வரும், நிதியமைச்சருமான ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்து உரை நிகழ்த்தினார்.
அவர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் உள்ள அறிவிப்புகள் வருமாறு,
தானே புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தென்னங்கன்று இலவசமாக வழங்கப்படும்.
புதுவையில் வேளாண் பல்கலைக்கழகம் தொடங்கப்படும்.
பாசிக் நிறுவனத்தை சீர்செய்ய ரூ.15 கோடி நிதியுதவி அளிக்கப்படும்.
கறவை மாடுகள், வண்டிமாடுகள் இறந்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.15,000 வழங்கப்படும்.
கூட்டுறவு சங்க விவசாயிகளுக்கு மழைக்கால உதவித்தொகை ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்படும்.
நெசவாளர் மாத ஊதியம் ரூ.1,350க உயர்த்தப்படும்.
மாணவர்களுக்கு கூடுதலாக 50 இலவச பஸ்கள் இயக்கப்படும்.
புதுவையில் தொழில் வணிக மையம் அமைக்கப்படும்.
முதியோர் மற்றும் விதவை மாதாந்திர ஓய்வூதியம் ரூ.1000ல் இருந்து ரூ.1,100க உயர்த்தப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று முதல் வரும் 31ம் தேதி வரை மொத்தம் 10 நாட்கள் நடைபெறும். குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளதால் இன்றைக்குப் பிறகு வரும் 21ம் தேதியே மீண்டும் சட்டசபை கூட்டம் தொடர்கிறது.
பட்ஜெட் மீதான விவாதம், மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் ஜூலை 30ம் தேதி வரை 8 நாட்கள் நடக்கின்றன. 31ம் தேதி தனி நபர் அலுவல் நடக்கிறது.
இத்துடன் இந்த சட்டசபை கூட்டத்தொடர் முடிவடைகிறது.