அரக்கோணம்... நிர்வாண நிலையில் 2 பெண்கள், ஒரு ஆணுக்கு கழுத்தில் வெட்டு-ஒரு பெண் பலி!
அரக்கோணம்: அரக்கோணத்தில் ஒரு வீட்டில் அந்த வீட்டைச் சேர்ந்த பெண் மற்றும் வேறு ஒரு பெண், ஒரு ஆண் ஆகியோர் சரமாரியாக வெட்டப்பட்டனர். அதில் ஒரு பெண் உயிரிழந்தார். மற்ற இருவரும் உயிருக்குப் போராடி வருகின்றனர்.
காதல் விவகாரம் அல்லது கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதில் ஒரு ஜோடி நிர்வாண நிலையில் படுக்கை அறையில் கிடந்தது. ஆனால் இவர்கள் கணவன் மனைவி இல்லை என்று கூறப்படுகிறது.
அரக்கோணம் அதாவுல்லா தெருவைச் சேர்ந்தவர் தீனதயாளன், ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவரது மகள் ஷர்மிளா . 24 வயதாகிறது. இவருக்கு மாப்பிள்ளை பார்ப்பதற்காக பெற்றோர் வெளியூர் போயிருந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை தீனதயாளன் வீட்டு குளியலறை வென்டிலேட்டரிலிருந்து புகை வந்தது. இதைப் பார்த்த வீட்டின் மேல் பகுதியில் வசித்து வந்த தீனதயாளனின் உறவினர் விரைந்து வந்து எட்டிப் பார்த்தார். அப்போது ஷர்மிளா கழுத்து, தலையில் வெட்டுக் காயத்துடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்தார்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினரை திரட்டிக் கொண்டு உள்ளே புகுந்து ஷர்மிளாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த நிலையில் அடுத்த அரையில் முனகல் சத்தம் கேட்கவே அங்கு போய்ப் பார்த்தனர். அப்போது அங்கு நிர்வாண நிலையில் ஒரு ஆணும், பெணும் கழுத்தில் வெட்டுக் காயத்துடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். அவர்களது தலையிலும் வெட்டுக் காயம் இருந்தது.
உடனடியாக போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் விரைந்து வந்து அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஒரே வீட்டில் அந்த வீட்டுப் பெண், நிர்வாண நிலையில் இன்னொரு பெண், ஆண் ஆகியோர் வெட்டுப்பட்டுக் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நிர்வாண நிலையில் கிடந்தது மாதவன் மற்றும் ஆஷா என்பது தெரிய வந்தது. இருவரும் கணவன் மனைவி போலத் தெரியவில்லை. ஆனால் ஆஷாவுக்கு திருமணமாகி விட்டது. ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஆஷா பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். மற்ற இருவரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் ஏன் வெட்டப்பட்டார்கள் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.