பிரணாபுக்கு 'மன வலியுடன்' ஓட்டு போடுவோம்.. ஆனால், சோனியா வீட்டில் சாப்பிட மாட்டோம்: மம்தா

ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜியை ஆதரித்து வாக்களிக்கப் போவதாக நேற்று 'பல்டி' மம்தா பானர்ஜி அறிவித்தார்.
பிரதமர் மன்மோகன் சிங், அப்துல் கலாம், சோம்நாத் சாட்டர்ஜி ஆகிய மூன்று பேரில் ஒருவரையே ஜனாதிபதியாக்க வேண்டும் என்று கூறியிருந்த மம்தா காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்க மாட்டேன் என்று கூறி வந்தார்.
இந்த விஷயத்தில் ஆரம்பத்தில் இவருடன் இருந்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங், பிரணாபை ஆதரிப்பதாக அறிவித்து மம்தாவுக்கு ஷாக் தந்தார்.
மேலும் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளும், மாயாவதியின் பகுஜன் சமாஜ், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம், சிவசேனை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஃபார்வர்டு பிளாக் உள்ளிட்ட கட்சிகளும் பிரணாபுக்கு ஆதரவு தெரிவித்தன.
அதே போல பாஜக, அதிமுக ஆகியவை சங்மாவை வேட்பாளராக அறிவித்துவிட்டன. இதனால், மம்தா தனிமைப்பட்டார்.
இருப்பினும் பிரணாபுக்கு ஆதரவு அளிக்குமாறு மம்தாவை காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. பிரதமர் மன்மோகன் சிங்கும், பிரணாபும் பலமுறை மம்தாவிடம் ஆதரவு கோரினார். அதே போல சங்மாவும், மம்தாவைச் சந்தித்து ஆதரவு கோரினார். அப்போது, தேர்தல் நடைபெற உள்ள 19ம் தேதிக்கு ஓரிரு நாள்களுக்கு முன்பாகத் தனது முடிவை அறிவிப்பதாக மம்தா கூறியிருந்தார்.
இந்நிலையில், நேற்று தனது கட்சித் தலைவர்களைக் கூட்டி ஆலோசித்த பின் நிருபர்களிடம் தனது பல்டி நிலையை மம்தா அறிவித்தார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் நலன், தேசத்தின் நலன், மக்களின் நலன் ஆகியவற்றை மனதில் கொண்டு, ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பது என்று முடிவு செய்துள்ளோம். எனினும், எந்தத் தனி மனிதரையும் நாங்கள் ஆதரிக்கவில்லை. நாங்கள் எடுத்துள்ள இந்த மன வலியுடன் கூடிய கடினமான முடிவு, யாரையும் திருப்திப்படுத்த அல்ல. மிகவும் தயங்கியே இந்த முடிவை எடுத்துள்ளோம். இது நாங்கள் மனப்பூர்வமாக எடுத்த முடிவல்ல.
எந்தவிதத் தூண்டுதலோ, நிதி பேரமோ இல்லாமல் இந்த முடிவை எடுத்துள்ளோம். பிரணாப் முகர்ஜி, மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர். ஜனாதிபதி தலைவர் தேர்தல் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நாங்கள் புறக்கணித்தால், அதுவும் பிரணாப் முகர்ஜிக்குச் சாதகமாகவே அமையும். நாங்கள் வாக்களித்தாலும் அவருக்குச் சாதகம்தான். எனவே பிரணாபை ஆதரிப்பது என்று தீர்மானித்தோம். எங்களுக்கு வேறு வழியில்லை.
துணா ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்று நாங்கள் பின்னர் முடிவு செய்வோம். பிரதமர் மன்மோகன் சிங் என்னிடம் தொலைபேசியில் ஹமீத் அன்சாரிக்கு ஆதரவு தருமாறு கோரினார் என்றார் மம்தா.












Click it and Unblock the Notifications