விரைவில் பொதுச் சொத்தாகும் நிலத்தடி நீர்: மத்திய அரசு புதிய சட்டம்
டெல்லி: விரைவில் நிலத்தடி நீரை பொதுச் சொத்தாக்க மத்திய அரசு புதிய சட்டம் ஒன்றை கொண்டு வரப் போவதாகக் கூறப்படுகிறது.
பொது மக்களும், தொழிற்சாலைகளும் தங்கள் இஷ்டத்திற்கு போர்வெல் போட்டு தண்ணீர் எடுப்பதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து கொண்டிருக்கிறது. இதனைத் தடுக்கும் விதமாக கண்காணிப்பு குழு அமைக்கபடவுள்ளதாக தகவல் வெளியானது.
இது தொடர்பாக தன்னார்வ அமைப்புகள் மத்திய நிலத்தடி நீர் மேலாண்மை கழகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளன.
அந்த கடித்தத்தில் கூறப்பட்டுள்ளதாவது,
இயற்கையின் உன்னத பரிசான நிலத்தடி நீரை மக்கள் மற்றும் தொழிற்சாலைகள் தேவைக்கதிகமாக உறிஞ்சுவதால் நிலத்தடி நீர் மட்டம், அடிமட்ட அளவிற்கு சென்று விட்டது. இதை ஒழுங்கு மற்றும் சீர்படுத்தி நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய அரசியலமைப்பின் 252வது பிரிவின் படியும், நிலத்தடி நீர் மேலாண்மை விதிகளுக்கேற்பவும் நிலத்தடி நீரை பொது சொத்தாக்க புதிய சட்டம் இயற்றும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே மாநிலங்களுக்கு இடையே நதிநீர் பங்கீட்டில் பிரச்சனை நிலவுவதால் இந்த புதிய சட்டம் மாநில அரசின் சட்டத்திற்கு உட்படாமல் மத்திய அரசின் சட்டங்களுக்கு மட்டுமே உட்படும் வகையில் இயற்றப்படுகிறதாம்.
நீர்நிலைகளை கண்காணிக்கும் பொறுப்பை பஞ்சாயத்து ராஜ் உள்ளிட்ட அமைப்புகளுக்கு வழங்கப்பட உள்ளது என்று கூறப்படுகிறது. முத்ல கட்டமாக இந்த திட்டம் ஆந்திர மாநிலத்தில் செயல்படுத்தப்பட உள்ளது என்றும், அதன் பிறகு பிற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிகிறது.
நிலத்தடி நீரை உபயோகிப்பதில் உலகிலேயே இந்தியாவுக்கு தான் முதலிடம் கிடைத்துள்ளது. இந்தியாவின் குடிநீர் தேவையை மூன்றில் ஒரு பங்கு நிலத்தடி நீர் பூர்த்தி செய்கிறது. இந்நிலையில் வரும் 2025ம் ஆண்டிற்குள் நிலத்தடி நீர் வெகுவாகக் குறைந்து பிரச்சனை ஏற்படும் என்று சமீபத்திய ஆய்வு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications