கேரள பெண் கற்பழித்து கொலை: திமுக மாஜி எம்.எல்.ஏவிடம் டிஎன்ஏ சோதனை செய்ய முடிவு!
ராஜ்குமாரின் வீட்டுக்கு கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பீர்மேடு பகுதியை சேர்ந்த சந்திரன்-சுசீலா தம்பதியின் மகள் சத்யா (15) கடந்த மாதம் 23ம் தேதி வீட்டு வேலை செய்வதற்காக வந்தார்.
சத்யாவை பீர்மேடு பகுதியை சேர்ந்த வேலைக்கு ஆள் அனுப்பும் தரகர்கள் பன்னீர்செல்வம், ஹரிகிருஷ்ணன் ஆகியோர் தான் ராஜ்குமாரின் வீட்டில் சேர்த்துவிட்டனர்.
ஆனால் தன்னால் இங்கு வேலை செய்ய முடியவில்லை என்றும், உடனே ஊருக்கு அழைத்து செல்லுமாறும் சத்தயா தனது தந்தையிடம் தொலைபேசியில் கூறியுள்ளார். இந் நிலையில் சத்யா விஷம் குடித்துவிட்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் தரப்பட்டது.
முதலில் பெரம்பலூர் தனியார் மருத்துவமனையிலும் பின்னர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சத்யா இறந்தார். இதுகுறித்து சத்யாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையே கேரள மாநிலம் கோட்டயத்தில் சத்யாவுக்கு மீண்டும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் அவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பபட்டது தெரியவந்தது.
இதையடுத்து சத்யாவை கற்பழித்து கொன்றதாக திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார், அவரது நண்பர்கள் ஜெய்சங்கர், அன்பரசு ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் சத்யாவை அழைத்து வந்த புரோக்கர்கள் 2 பேரும் கேரளாவில் கைதானாயினர்.
இந்த வழக்கில் ராஜ்குமாருக்கு மரபணு பரிசோதனை நடத்த அனுமதி கோரி பெரம்பலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீது நாளை விசாரணை நடைபெறவுள்ளது.