அமைச்சர் முனுசாமியை முற்றுகையிட்ட அதிமுகவினருக்கு கல்தா: ஜெயலலிதா அதிரடி!
சென்னை: உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய அதிமுக நிர்வாகிகள் 4 பேரை முதல்வர் ஜெயலலிதா கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார்.
உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி கடந்த வாரம் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பில்லூர் இரண்டாவது கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணிகளை ஆய்வு செய்ய சென்றார்.
அப்போது இது குறித்து தங்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறி கவுண்டம்பாளையம் அதிமுக எம்.ஏல்.ஏ. ஆறுக்குட்டி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அமைச்சர் முனுசாமியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். இதனால் ஆய்வுப் பணிகளை முழுமையாக முடிக்க முடியாமல், அமைச்சர் முனுசாமி பாதியிலேயே திரும்பி விட்டார்.
ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரை ஆளுங்கட்சி நிர்வாகிகளே முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து அமைச்சர் கே.பி.முனுசாமி தரப்பு முதல்வர் ஜெயலலிதா கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. இதனையடுத்து கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக கோவை மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் ரங்கநாதன், எஸ்.எஸ். குளம் பேரூராட்சி ஜெயலலிதா பேரவை செயலாளர் தேவராஜ், கீரணத்தம் கிளை செயலாளர் ராமலிங்கம், விளாங்குறிச்சி கிளை செயலாளர் கோபால்சாமி ஆகியோரை கட்சியிலிருந்து நீக்கி தமிழக முதல்வரும், அதிமுகப் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications