நான் கர்ப்பமாக இருக்கிறேன்... புது யாஹூ சிஇஓ மரிசா மேயர் தகவல்!
இன்னும் ஒரு நல்ல செய்தியை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். நானும், எனது கணவரும் எங்களது குழந்தையைக் காண ஆவலாக உள்ளோம் என்று தனது டிவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார் மரிசா.
37 வவயதான மரிசா மேயர் யாஹூ நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக அறிவிக்கப்பட்ட செய்தி நேற்றுதான் வெளியானது. ஆணாதிக்கம் மிகுந்த சமுதாயத்தில் ஒரு உலகா மகா தலைமைப் பொறுப்புக்கு பெண், அதுவும் இத்தனை இளம் வயதுடைய பெண் நியமிக்கப்பட்டிருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த நிலையில்தான் மரிசா தான் கர்ப்பமாக இருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளார்.
அவர் தற்போது 6 மாத கர்ப்பமாக இருக்கிறாராம். இது சில கேள்விகளையும் கூடவே சேர்த்து கொண்டு வந்திருக்கிறது. மிகப் பெரிய பொறுப்பை வகிக்கப் போகும் மரிசாவால், கர்ப்ப கால சிரமங்களையும் எப்படி தாங்கிக் கொள்ள முடியும் என்பதுதான் அது. இதுவும் கூட ஒருவகையில் ஆணாதிக்கம் மிகுந்த கேள்விதான்!.
அதேசமயம், உலகளவிலான ஒரு உயர் பொறுப்பை பெண் ஒருவர் கர்ப்பமாக இருக்கும் நிலையில் வகிக்கப்பது உலகிலேயே இதுதான் முதல் தடவை என்று கூறுகிறார்கள். அந்த வகையில் மரிசா புதிய சாதனை படைக்கவுள்ளார் என்பது நிச்சயம்.
மேலும் பல்வேறு உலகளாவிய நிறுவனங்களில் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருக்கும் பெண்களிலேயே மரிசாதான் மிகவும் வயது குறைந்தவர் என்றும் பார்ச்சூன் பத்திரிக்கை கூறியுள்ளது.
புதிய பொறுப்பை ஏற்கவுள்ள மரிசா, தான் சில வார கால பிரசவ மகப்பேறு விடுப்பை மட்டுமே எடுக்கப் போவதாகத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.