சென்னையில் வாக்களித்த ஜெ கொடநாடு கிளம்பினார்; டெல்லியில் முதல் ஆளாக வாக்களித்த அழகிரி!
சென்னை: இன்று நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். வாக்களித்த கையோடு மீண்டும் கொடநாடு சென்றுவிட்டார்.
குடியரசுத் தலைவர் தேர்தல் இன்று காலை 10 மணிக்கு துவங்கியது. இந்த தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளரான பிரணாப் முகர்ஜிக்கும், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சில கட்சிகளின் ஆதரவோடு போட்டியிடும் சங்மாவுக்கும் இடையே தான் போட்டி நிலவுகிறது. கடந்த மாதம் 21ம் தேதியில் இருந்து கொடநாட்டில் இருந்த முதல்வர் ஜெயலலிதா குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பதற்காக நேற்று பிற்பகல் சென்னை வந்தார்.
தமிழகத்தில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதற்காக சட்டசபை குழு கூட்ட அரங்கில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. இந்த வாக்குச்சாவடியில் இன்று காலை 10 மணி வாக்கில் ஜெயலலிதா வாக்களித்தார். மேலும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், சென்னையில் வாக்களிக்க தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்றுள்ள 15 எம்.பி.க்கள் ஆகியோர் வாக்களித்தனர்.
டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு துவங்கிய அரை மணிநேரத்திலேயே திமுக எம்.பி. அழகிரி வாக்களித்தார். முதல் ஆளாக வாக்களித்தவர்களில் அவரும் ஒருவர் ஆவார். அகமதாபாத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி 11 மணிக்கு மேல் வாக்களி்த்தார்.
வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து வரும் 22ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். ஜெயலலிதா இன்று பகல் 12.30 மணிக்கு சென்னை விமான நிலையம் சென்றார். அங்கிருந்து விமானம் மூலம் கொடநாடு கிளம்பினார்.












Click it and Unblock the Notifications