பராமரிப்பு பணி: பழனி கோவில் ரோப்கார் நாளை முதல் 1 மாதத்திற்கு தற்காலிக நிறுத்தம்
திண்டுக்கல்: பராமரிப்பு பணிக்காக பழனி கோவில் ரோப்கார் நாளை முதல் ஆகஸ்ட் 20ம் தேதி வரை ஒரு மாத காலம் தற்காலிகமாக இயங்காது என அதன் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள மலைக்கோவில்களில் பழனி முருகன் கோவிலும் ஒன்று. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. முருகனுக்கு உரிய அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடு பழனி ஆகும்.
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவில் அமைந்துள்ள மலையின் உயரம் 150 மீட்டர். அந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் என்றால் மொத்தம் 693 படிக்கட்டுகள் ஏற வேண்டும். மலையைச் சுற்றி 2.4 கி.மீ கிரிவலப் பாதை உள்ளது. இதன் மூலமும் கோவிலை அடையலாம். இக்கோவிலுக்கு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.
மலை உச்சியில் சென்று சாமி தரிசனம் செய்ய முதியவர்களும், சிறியவர்களும், உடல் நலம் குன்றியவர்களும் மிகவும் சிரமப்பட்டனர். இதனைக் கருத்தில் கொண்டு பழனி கோவிலில் ரோப்கார் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றது.
ரோப்காரின் பராமரிப்பு பணியை கொல்கத்தாவைச் சேர்ந்த ரோப்கார் ரிசார்ட்ஸ் நிறுவனம் செய்து வருகிறது. இந்நிலையில் பராமரிப்பு பணிக்காக ஒரு மாதம் ரோப்கார் இயக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பழனி கோயில் இணை ஆணையர் பாஸ்கரன் கூறுகையில்,
பராமரிப்பு பணிக்காக நாளை (ஜூலை 20 ந் தேதி) முதல் ஆகஸ்ட் 20ம் தேதி வரை ரோப்கார் இயக்கம் தற்காலிமாக நிறுத்தப்பட உள்ளது. சோதனை ஓட்டத்திற்குப் பின்பு ரோப்கார் பக்தர்களின் பயன்பாட்டிற்குப் பயன்படுத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications