காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் இடையே முரண்பாடுகள் இருக்கின்றன: பிரபுல் பட்டேல்

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை இன்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்புக்குப் பிறகு சரத்பவாரின் இல்லத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பிரபுல் பட்டேல் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சிக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும் இடையே அரசியல் விவகாரங்களில் கருத்து மாறுபாடு இருந்து வருகிறது. தேசியவாத காங்கிரஸைப் பொறுத்தவரை காங்கிரஸ் கூட்டணியில் கடந்த 8 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்தக் கூட்டணியில் தமது பொறுப்பை உணர்ந்து செயல்படக் கூடிய கட்சி.
ஆனால் காங்கிரஸ் கட்சியில் இருக்கக் கூடிய ஒரு பிரிவினர் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் உறவை சீர்குலைப்பதில் மிகவும் ஆர்வமாக செயல்பட்டு வருகின்றனர். மத்திய அமைச்சரவையில் முக்கிய பொறுப்பை தேசியவாத காங்கிரஸ் கோருவதாக செய்திகளைப் பரப்பி விடுகின்றனர். இதைத் தொடர்ந்துதான் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எங்களது நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. அதன் பின்னர் மன்மோகன்சிங் நேற்று இரவு சரத்பவாரிடம் பேசினர். இன்று காலை சோனியா காந்தி அழைத்ததின் பேரில் சரத்பவாரும் நேரில் சென்று பேசினார். அதற்காக அமைச்சரவையிலிருந்து வெளியேறிவிட்டதாகக் கூறப்படுவதை நாங்கள் நிராகரிக்கிறோம்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியானது ஒரு சிறிய கூட்டணிக் கட்சி என்பதால் நம்பர் 2 என்ற தகுதியை மறுப்பது சரியல்ல. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஒரு அங்கம்தான் பவார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் கடந்த கால அரசில் பிரணாப் முகர்ஜிக்கு அடுத்த நிலையில்தான் அமரவைக்கப்பட்டார் சரத்பவார்.
அதேபோல் இது அமைச்சரவை விவகாரம், நம்பர் 2 விவகாரம் மட்டுமல்ல.. 2014-ம் ஆண்டு தேர்தலை மனதில் வைத்தும் விவாதிக்கப்பட வேண்டியவை உள்ளன. குடியரசுத் தலைவர் தேர்தல் முடிந்த பிறகு இந்த விவகாரங்களை ஆராய்வோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications