ராகுல் காந்தியின் 'விஸ்வரூபம்' பாஜகவுக்கு நெருக்கடியைத் தருமா?

கட்சியிலும், ஆட்சியிலும் இனி கூடுதல் பொறுப்பை வகிக்கப் போவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி அறிவித்தவுடனேயே அவரை பாஜக சாடிப் பேசியது. ராகுல் இந்நாள் வரைக்கும் குடும்ப வியாபராத்தை தான் கவனித்து வருகிறார் என்று பாஜக தாக்கிப் பேசியது. வரும் 2014ம் ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக்கினால் அது பாஜகவுக்கு கண்டிப்பாக நெருக்கடியைத் தரும்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள சில கட்சிகள் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக ஐக்கிய ஜனதாதள தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் மோடியை கண்டிப்பாக பிரதமர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ள முடியாது என்று பகிரங்கமாக அறிவித்தார். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தபோது பாஜக தலைவர் நிதின் கட்காரி தலையிட்டு அதைப் பற்றி பிறகு பார்க்கலாம் முதலில் குடியரசுத் தலைவர் தேர்தலில் கவனம் செலுத்துவோம் என்று கூறி கூட்டணி கட்சிகளின் கவனத்தை திசை திருப்பினார்.
சரி, அதிலாவது தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஒற்றுமையாக இருந்தார்களா, இல்லையே. தேசிய ஜனநாயக கூட்டணி பி.ஏ. சங்மாவை ஆதரிப்பது என்று முடிவு செய்தது. ஆனால் அந்த கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனாததளம் மற்றும் சிவசேனா ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளரான பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவளித்தன. முன்னதாக ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து கொண்டு பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க மறுத்து முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி ஆதரவளித்தார்.
காங்கிரஸுக்கும், திரிணாமூல் காங்கிரஸுக்கும் இடையே ஏற்பட்ட விரிசலை பெரிதாக்க மமதாவின் இந்த முடிவை வரவேற்ற பாஜக தானும் அப்துல் கலாமை ஆதரிக்க தயார் என்றது. ஆனால் அப்துல் கலாமோ தேர்தலில் போட்டியிட மறுத்துவிட்டார். இதையடுத்து பாஜக சற்றும் எதிர்பாராவிதமாக முரண்டுபிடித்த மமதா பானர்ஜி ஒரு வழியாக வழிக்கு வந்து பிரணாப் முகர்ஜியை ஆதரித்தார். இதனால் பாஜகவின் முயற்சியெல்லாம் வீணானது.
இப்போது குடியரசுத் தலைவர் தேர்தல் முடிந்த நிலையில் பிரதமர் வேட்பாளர் பிரச்சனை மீண்டும் தலைதூக்கும். மோடி வேண்டவே வேண்டாம் என்று நிற்கும் நிதிஷ் குமாரை பாஜகவால் ஒதுக்கி வைத்துவிட முடியாது. இப்படி பாஜகவுக்குள் இத்தனை பிரச்சனை இருக்கையில் வரும் 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று அக்கட்சி நம்புகிறது.
ராகுல் காந்தியை தாக்கிப் பேசுவதால் பாஜகவின் பிரச்சனைகள் ஒன்றும் தீர்ந்துவிடாது. மேலும் மோடியை பிரதமர் வேட்பாளராக்க தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே கிளம்பியுள்ள எதிர்ப்பு மாறும் என்றும் கூற முடியாது. இந்நிலையில் வரும் 2013ம் ஆண்டு மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. ஒரு வேளை பாஜக இந்த 3 மாநிலங்களிலும் வெற்றி வாகை சூடினால் இந்த மாநிலங்களில் இருந்து யாராவது ஒருத்தரை பிரதமர் வேட்பாளர் ஆக்கலாம்.
பாஜகவால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சமாளிக்க முடியவில்லை. கடந்த 2004ம் ஆண்டு பதவி பறிபோனதில் இருந்து பாஜகவும் சோனியாவின் வெளிநாட்டு பிறப்பு பிரச்சனை முதல் வரும் 2014ம் ஆண்டு பிரதமர் வேட்பாளர் தேர்வு வரை பல பிரச்சனைகளை கிளப்பிப் பார்த்தும் சோனியாவை அசைக்க முடியவில்லை. இனி ஏதாவது புது ஐடியாவை வைத்து தான் பாஜக பலகீனமாக உள்ள காங்கிரஸை எதிர்க்க வேண்டும். ஆனால் காங்கிரஸை விட பலகீனமாக இருக்கும் பாஜகவால் இது முடியுமா என்ன?












Click it and Unblock the Notifications