''மூளைக்காய்ச்சலால் இறந்தாள்''...கேரள சிறுமி பலாத்கார வழக்கில் திடீர் திருப்பம்!
கொல்லம்: கேரள சிறுமி பாலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் புது திருப்பம் ஏற்பட்டுள்ளது. தனது மகள் மூளைக்காய்ச்சலால் தான் இறந்தாள் என்றும் அவளை யாரும் கொலை செய்யவில்லை என்றும் அந்த சிறுமியின் தந்தை தெரிவி்த்துள்ளார்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பீர்மேடு பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவரின் மகள் சத்யா(15). அவர் பெரம்பலூர் திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் வீட்டில் தங்கி இருந்து வீட்டு வேலை செய்து வந்தார். இந்நிலையில் அவர் திடீர் என்று மர்மமான முறையில் இறந்தார். உடல்நலக் குறைவால் சிறுமி இறந்ததாக ராஜ்குமார் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் தனது மகள் கற்பழித்து கொலை செய்யப்பட்டதாக சந்திரன் புகார் கூறினார்.
அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார், திமுக மாவட்ட பிரதிநிதி ஜெய்சங்கர், டாஸ்மாக் ஊழியர் அன்பரசன், டிரைவர் மகேந்திரன் ஆகியோரை கைது செய்தனர். திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4 பேருக்கும் ஆண்மை பரிசோதனை செய்ய பெரம்பலூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து ராஜ்குமார் உள்ளிட்ட 4 பேருக்கும் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனித்தனியாக பரிசோதனைகள் நடத்தப்பட்டது. சோதனையின் முடிவில் ராஜ்குமார் உட்பட 4 பேரும் ஆண்மை உள்ளவர்கள்தான் என மருத்துவர்கள் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இதைத் தொடர்ந்து 4 பேரும் மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் பீர்மேடு சமூகநல அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் சத்யாவி்ன் தந்தை சந்திரன், தாய் சுசீலா ஆகியோரிடம் கேரள குழந்தைகள் நல கமிட்டியினர் விசாரணை நடத்தினர். அப்போது சந்திரன் கூறுகையில், எனது குடும்பம் மிகவும் வறுமையில் உள்ளது. குழந்தைகளை படிக்க வைக்க மிகவும் சிரமப்பட்டேன். இந்நிலையில் எனது மகள் சத்யாவை பெரம்பலூர் திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் வீட்டில் தங்கி படிக்க வைக்கலாம் என்று கூறி பீர்மேட்டைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன், பன்னீர்செல்வம், விஜயகுமார் ஆகியோர் கூறினர்.
இதையடுத்து நானும், எனது மனைவியும் மகள் சத்யாவை அழைத்துக் கொண்டு பெரம்பலூரில் உள்ள ராஜ்குமார் வீட்டில் விடுவதற்காக சென்றோம். அங்கு வைத்து எனது மகளை அவரது மகளுடன் சேர்த்து படிக்க வைப்பதாக ராஜ்குமார் கூறினார். மேலும் ரூ.5,000 பணம் தந்தார்.
நாங்கள் ஊருக்கு திரும்பிய மறுநாளே சத்யா எங்களுக்கு போன் செய்து எனக்கு அங்கிருக்க பிடிக்கவில்லை, என்னை உடனடியாக அழைத்துச் செல்லுங்கள் என்று கூறினாள். அதற்கு மறுநாள் பெரம்பலூரில் உள்ள மருத்துவமனையில் சத்யாவை அனுமதித்திருப்பதாக போன் வந்தது.
இதையடுத்து நாங்கள் அங்கு சென்றபோது டாக்டர்கள் சத்யாவுக்கு மூளை காய்ச்சல் என்று கூறினர். அவளது நிலைமை மோசமானதால் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கு தான் சத்யா இறந்தாள். எனது மகளை யாரும் கொன்றிருப்பார்கள் என நான் நம்பவில்லை என்றார்.
இது குறித்து குழந்தைகள் நல கமிட்டியின் செரியன் கு. குரியன் கூறியதாவது, சந்திரனும், சுசீலாவும் முன்னுக்கு பின் முரணாகப் பேசுகிறார்கள். ராஜ்குமார் தனக்கு ரூ. 5,000 கொடுத்ததாக சந்திரன் கூறுகிறார். ஆனால் சுசீலா ரூ.3,000 கொடுத்தாகக் கூறுகிறார். இருவரது வாக்குமூலமும் முன்னுக்கு பின் முரணாக இருப்பதால் மேலும் விசாரிக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications