எங்கு பார்த்தாலும் சுகாதார சீர்கேடு... சென்னையில் காலரா பீதி
சென்னை: சென்னையில் வயிற்றுப் போக்கு அதிகரித்து வருகிறது. இதுவரை 36 பேர் தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரு பெண் நேற்று உயிரிழந்துள்ளார். இதையடுத்து சென்னையில் காலரா பரவி வருவதாக மக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.
தலைநகரில் எங்கு பார்த்தாலும் தேங்கிக் கிடக்கும் குப்பையும், சுகாதார சீர்கேடுமே காலரா பரவக் காரணம் என்றும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சென்னையில் தற்போது பலர் வயிற்றுப் போக்குப் பிரச்சினையில் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பலர் தண்டையார்ப்பேட்டை அரசு தொற்றுநோய் மருத்துவமனைக்கு வயிற்றுக்கோளாறு காரணமாக படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். இதுவரை 36 பேர் வயிற்றுப்போக்கு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் 6 பேர் இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் நேற்று 60 வயதான குளம்மாள் என்பவர் வாந்தி, பேதி காரணமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து சென்னையில் பரவுவது காலரா என்று மக்களிடையே கருத்து எழுந்துள்ளது.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியிலும் வாந்தி பேதி காரணமாக பலரும் சிகிச்சை பெற வருகின்றனர்.
சென்னை நகரில் ஆரோக்கிய சீர்கேடு அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பல வார்டுகளிலும் குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன. அவ்வப்போது பெய்யும் மழை காரணமாக இவை பெரும் நாற்றத்தை ஏற்படுத்துகின்றன. மேலும் பன்றிகளின் பெருக்கமும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகின்றன.
மாநகராட்சி அதிகாரிகள் இதுகுறித்து அக்கறை காட்டுவதில்லை என்றும் கவுன்சிலர்கள் சரிவர தங்களது பணிகளைக் கவனிப்பதில்லை என்றும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தற்போது மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வருவோருக்கு காலரா பாதிப்பே இருப்பதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்களும் தெரிவிக்கின்றன. இது கவலை அளிப்பதாக உள்ளது. காலரா மேலும் பரவாமல் தடுக்க மாநகராட்சி அதிகாரிகளும், மாநில சுகாதாரத் துறையும் போர்க்கால நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications