பதவியேற்கும் நாளில் பிரணாபுக்கு எதிரான ஊழல் ஆதாரங்களை வெளியிடுவோம்: அன்னா ஹசாரே

இது குறித்து ஹசாரே குழு உறுப்பினர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில்,
ஏற்கனவே ஒரு ஊழல்வாதி பிரதமர் இருக்கையில் தற்போது குடியரசுத் தலைவரும் ஊழல்வாதியாக வந்துள்ளார். பிரணாப் முகர்ஜிக்கு எதிரான ஊழல் ஆதாரங்களை வரும் 25ம் தேதி நாங்கள் துவங்கவிருக்கும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின்போது வெளியிடுவோம். இனிமேல் அரசை நம்புவதாக இல்லை. அரசின் உறுதிகளை இம்முறை ஏற்க மாட்டோம்.
எங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு காணாவிட்டால் எங்கள் உடல்களைத் தான் அந்த இடத்தில் இருந்து அகற்ற வேண்டும். தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை முடிக்க மாட்டோம் என்றார்.
அன்னா குழுவினர் ஊழலுக்கு எதிராக வரும் 25ம் தேதி முதல் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கின்றனர். அதே நாளில் தான் பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவராக பொறுப்பேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தலில் போட்டியிடும் அன்னா குழு:
ஊழலுக்கு எதிராகப் போராடி வரும் அன்னா குழுவினர் வரும் 2014ம் ஆண்டு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்தும், தங்கள் தலைமையில் புதிய அணி உருவாக்குவது குறித்தும் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. அன்னா குழு உறுப்பினர்களான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கிரண் பேடி உள்ளிட்டோர் தேர்தலில் போட்டியிடும் கருத்துக்கு ஆதரவளித்துள்ளனர்.
மேலும் சில உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளனர். அதில் பல உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளை தேர்ந்தெடுத்துவிட்டார்களாம். அன்னா குழுவின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் ஹிமாச்சல பிரதேசத்தில் இருந்தும், மற்றொருவர் ஹரியானாவில் இருந்தும் போட்டியிட விரும்புகிறார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் ஒருவர் மேற்கு உத்தர பிரதேசத்தில் இருந்து போட்டியிட விரும்புகிறாராம்.
ஆனால் தேர்தலில் போட்டியிட அவர்கள் இன்னும் அன்னா ஹசாரேவிடம் அனுமதி பெறவில்லையாம். அன்னா தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் அவரது உறுபினர்களை ஆசிர்வதிப்பார் என்று அக்குழுவில் உள்ள ஒருவர் தெரிவி்த்தார்.












Click it and Unblock the Notifications