தமிழகத்தின் நெல் சாகுபடி குறித்த உண்மை நிலவரம் இது தான்!: ஜெயலலிதா

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் குறுவை சாகுபடி பரப்பு இந்த ஆண்டு மிகவும் குறைந்துவிட்டது என்றும், எனவே நெல் உற்பத்தி பெருமளவு பாதிக்கும் என்றும் அவ்வப்போது பத்திரிகைகளில் செய்திக் கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன. இந்தச் செய்திகள் மக்களிடையே தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்துவதால், தமிழ்நாட்டின் நெல் சாகுபடி குறித்த உண்மை நிலவரத்தை விளக்க வேண்டியது எனது கடமையாகும்.
தமிழ்நாட்டில், சாதாரணமாக ஒவ்வொரு ஆண்டும் 47.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்படுகிறது. இதில், சுமார் 40 சதவீதம் காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்படுகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை நெற் பயிர் ஜுன், ஜுலை மாதங்களில் 3.20 லட்சம் ஏக்கரிலும், சம்பா பயிர் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் 11.5 லட்சம் ஏக்கரிலும் மற்றும் தாளடி பயிர் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் 3 லட்சம் ஏக்கரிலும் பயிரிடப்படுகிறது.
மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடுவதன் அடிப்படையிலேயே குறுவை நெல் சாகுபடி பரப்பு அமையும். குறுவை சாகுபடி காலத்தில் மேட்டூர் அணையில் நீர் வரப்பெற்றால் தான் குறுவை பயிர் காலம் முழுவதும் தேவையான தண்ணீர் வழங்க இயலும்.
இதனைக் கருத்தில் கொண்டு தான், காவிரி நடுவர் மன்றம் 1991ம் ஆண்டு வழங்கிய தனது இடைக்கால உத்தரவில், தென்மேற்கு பருவ காலத்தில் கர்நாடகம் ஜூன் மாதம் 10.16 டி.எம்.சி. அடி தண்ணீரும், ஜூலை மாதம் 42.76 டி.எம்.சி அடி தண்ணீரும், ஆகஸ்ட் மாதம் 54.72 டி.எம்.சி. அடி தண்ணீரும், செப்டம்பர் மாதம் 29.36 டி.எம்.சி. அடி தண்ணீரும், அதாவது ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 137.00 டி.எம்.சி. அடி தண்ணீர் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.
2007ம் ஆண்டு காவேரி நடுவர் மன்றத்தால் வழங்கப்பட்ட இறுதி உத்தரவில் காவிரிப் படுகையில் கிடைக்கப் பெறும் 740 டி.எம்.சி. அடி தண்ணீரில், 429 டி.எம்.சி. அடி தண்ணீர் தமிழகத்திற்கு உரியது என்றும், கர்நாடகம் ஜூன் மாதம் 10 டி.எம்.சி. அடி தண்ணீரும், ஜூலை மாதம் 34 டி.எம்.சி அடி தண்ணீரும், ஆகஸ்ட் மாதம் 50 டி.எம்.சி. அடி தண்ணீரும், செப்டம்பர் மாதம் 40 டி.எம்.சி. அடி தண்ணீரும், அதாவது ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 134.00 டி.எம்.சி. அடி தண்ணீரை கர்நாடகம் தமிழகத்திற்கு விடுவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளது.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணை மத்திய அரசிதழில் வெளியிடப்பட வேண்டும் என்று பிரதமர் அவர்களையும், மத்திய அரசையும் நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ள போதிலும், மத்திய அரசு இன்னமும் இதற்கு செவி சாய்க்கவில்லை.
எந்தவிதக் கொள்கை முடிவுகளையும் எடுக்க இயலாமல் கொள்கை முடக்கத்தில் சிக்கியுள்ள மத்திய அரசுக்கு தமிழகத்தின் ஜீவாதாரப் பிரச்சனையான காவிரி நதி நீர்ப் பிரச்சனையை ஏறெடுத்தும் பார்க்க இயலவில்லை.
இந்தத் தருணத்தில், ஜூன் மாதத்திலிருந்து கர்நாடக நீர்பிடிப்புப் பகுதியில் பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்ட நிலையில், இடர்ப்பாடு காலங்களில் விடுவிக்க வேண்டிய அளவுக்குக்கூட கர்நாடகம் நீரை தமிழகத்திற்கு விடுவிக்காததால், குறுவை சாகுபடியை ஓரளவு மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
எனவே, நீர் இருப்பு குறித்து ஆய்வு நடத்தி, அன்றைய நிலவரப்படி, மேட்டூர் அணையில் 41.11 டி.எம்.சி. அடி தண்ணீரே இருந்ததால், குறுவைப் பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பதற்கு வழிவகை இல்லை என்பதைக் கருத்தில் கொண்டும், காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் சுமார் 80,000 பம்பு செட்டுகள் உள்ளன என்பதால் இந்த பம்பு செட்டுகளுக்கு போதிய அளவு மின்சாரம் வழங்கப்பட்டால் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி ஓரளவு குறுவை சாகுபடியை மேற்கொள்ள இயலும் என்பதைக் கருத்தில் கொண்டும், டெல்டா விவசாயிகளுக்கு 17.6.2012 முதல் 12 மணி நேர மும்முனை மின்சாரம் விவசாயப் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டது.
இதன் காரணமாக, ஜுலை 19ம் தேதி வரை 87,000 ஏக்கர் பரப்பில் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போதுள்ள நாற்றங்காலின் பரப்பினை கொண்டு அடுத்த பத்து நாட்களில் மேலும் கூடுதலாக 50,000 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்வதன் மூலம் மொத்தம் 1,37,000 ஏக்கரில் இவ்வாண்டு குறுவை நெல் சாகுபடி செய்யப்படும்.
டெல்டா மாவட்டங்களில் சராசரியாக பம்பு செட் மூலம் ஒரு லட்சம் ஏக்கரில் மட்டுமே குறுவை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஆனால், விவசாயத்திற்காக 12 மணி நேரம் தொடர்ந்து மின்சாரம் வழங்கப்படுவதால், கூடுதலாக 37,000 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய வழி வகுக்கப்பட்டுள்ளது.
நீர் பற்றாக்குறை காரணமாக நிலவி வரும் சூழ்நிலையினை வேளாண்மைத்துறை தொடர்ந்து கண்காணித்து வருவதுடன் விவசாயிகளுடன் தொடர்பு கொண்டு அவர்களுக்கு தேவையான முக்கிய இடுபொருட்கள், தொழில்நுட்பங்கள் மற்றும் தகவல்கள் உரிய நேரத்தில் உடனுக்குடன் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
நெல் சாகுபடி மேற்கொள்ளப்படும் பகுதிகளில், திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பங்களை மேற்கொண்டு நீர் பயன்பாட்டு திறனை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், தண்ணீர் பற்றாக்குறைக்கு மாற்று ஏற்பாடாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் 200 ஏக்கரில் நெல் விதைக்கும் கருவியால் நேரடி நெல் விதைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக்கருவி விதைக்கும் போதே உரமிடும் திறனும் கொண்டது.
இன்னும் ஐந்து வட்டாரங்களில் 250 ஏக்கரில் நேரடி நெல் விதைப்பு பணி விரைவாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீர் பற்றாக்குறையினை போக்கும் இந்த மாற்று நடவடிக்கை குறுவை பருவத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்டதில்லை. நெல்பயிர் மட்டுமின்றி மற்ற உணவு தானியங்களின் சாகுபடி பரப்பை உயர்த்தும் வகையில் மாற்றுச் சாகுபடி திட்டமாக குறுகியகால பயறு வகைகள் மற்றும் சிறுதானியங்கள் பயிரிட விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வாய்ப்பு உள்ள இடங்களில் எல்லாம் நேரடி நெல் விதைப்பு மேற்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை வேளாண்மைத் துறை எடுக்கும். குறுவைச் சாகுபடி பரப்பில் ஏற்படும் குறைவினை சம்பா பருவத்தில் ஈடுகட்டும் வகையில் உயர்ரக விதைகள், உரங்கள், பயிர்பாதுகாப்பு மருந்துகளை தேவையான அளவு இருப்பு வைக்கவும், வேளாண்மை பொறியியல் துறை மூலமாக அனைத்து இயந்திரங்களும் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தண்ணீர் பற்றாக்குறை உள்ள இக்காலக்கட்டத்தில், தமிழ்நாட்டில் இதுவரை 3 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஜூலை மாத இறுதிக்குள் இன்னும் 1.52 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படும். கார், குறுவை, சொர்ணவாரி பட்டத்தின் குறியீடான 6.5 லட்சம் ஏக்கரில் இதுவரை 4.52 லட்சம் ஏக்கர் பரப்பில் நெல்சாகுபடி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கர்நாடக அரசு ஜூன் மாதம் முதல் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட திறந்துவிடாத நிலையிலும், குறுவை சாகுபடியில் விவசாயிகளுக்கு அதிக இழப்பு ஏற்படாத வகையிலான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துள்ளது.
எனினும், கர்நாடகத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் விரைந்து விடுவிக்கப்பட வேண்டியது அவசியமாகும். எனவே தான், 21.7.2012 அன்று இடர்ப்பாடு காலங்களில் விகிதாச்சார அடிப்படையில் கர்நாடகம் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும், காவேரி நதிநீர் ஆணையத்தின் கூட்டம் உடனடியாக கூட்டப்பட வேண்டும் என்றும், இடர்ப்பாடு காலங்களில் நீர்ப் பங்கீடு கணக்கீட்டிற்கு ஒப்புதல் அளிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எனவே, காவேரி நீரில் நமக்குரிய பங்கினை பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முனைப்புடன் எனது தலைமையிலான அரசு தொடர்ந்து எடுக்கும் என்பதையும், வேளாண் உற்பத்தியைப் பெருக்குவதற்கான அனைத்து உத்திகளையும் கடைபிடிக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications