இலங்கை கடற்படையின் தாக்குதல் தொடர்ந்து கொண்டே இருந்தால்...: வைகோ எச்சரிக்கை

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கச்சத் தீவு அருகே சனிக்கிழமை (ஜூலை 21) மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. இலங்கை கடற்படையினரால் இதுவரை சுமார் 570 தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் தாக்கப்பட்டு உள்ளனர்.
உலகின் எந்த ஒரு நாடும் தனது குடிமகனை, இன்னொரு நாட்டு ராணுவம் தாக்கினால் சீறி எழுந்து, எச்சரிக்கை செய்து, தூதரக உறவுகளைத் துண்டித்துக் கொள்ளும். ஆனால் தமிழக மீனவர்கள் மீது கொலைத் தாக்குதல் நடத்தும் இலங்கை அரசுக்கு, காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, ஒப்புக்குக் கூட கண்டனமோ, எச்சரிக்கையோ தெரிவித்தது இல்லை.
இலங்கை கடற்படையோடு, இந்தியக் கடற்படை தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் செய்து கொண்டது கண்டனத்துக்குரியது.
கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை கடற்படையின் தாக்குதலும், இந்திய அரசின் அலட்சியப் போக்கும் தொடருமானால் எதிர்காலத்தில் ஏற்படப் போகும் விபரீதமான விளைவுகளுக்கு இதுவே வித்தாகிவிடும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications