'மின்னல்' வேகத்தில் வந்த 108.. நடு ரோட்டிலேயே குழந்தை பெற்ற பெண்!

மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு, கடந்த திமுக அரசால் தமிழகத்தில் பாப்புலர் ஆன திட்டம் 108 ஆம்புலன்ஸ் திட்டம். போன் போட்ட சில நிமிடங்களிலேயே ஸ்பாட்டுக்கு வந்து நின்று மக்களின் அன்பையும், ஆதரவையும் பெற்ற திட்டம் இது. ஆனால் இப்போதெல்லாம் 108 ஆம்புலன்ஸுக்குப் போன் செய்தால் வர ரொமப் நேரமாவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில்,நேற்று இரவு சென்னையில் ஒரு பெண்ணுக்குப் பிரசவ வலி ஏற்பட்டு, அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல 108 ஆம்புலன்ஸுக்குப் போன் செய்துள்ளனர். ஆனால் ஆம்புலன்ஸ் வருவதற்குள் குழந்தையையே பெற்று விட்டார் அந்தப் பெண்.
சென்னை தலைமை செயலகத்தை அடுத்த போர் நினைவுச் சின்னம் அருகில் சத்யாநகர் குடியிருப்பு உள்ளது. குடிசைகள் நிறைந்த பகுதி இது. இந்தப் பகுதியில் மோகன் என்பவர் தனது மனைவி முத்துமாரியுடன் வசித்து வருகிறார். முத்துமாரி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று இரவு அவருக்கு வலி ஏற்பட்டது. உடனே அவரை திருவல்லிக்கேணி அரசு கோஷா மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல திட்டமிட்டனர். ஆட்டோவுக்காக ரோட்டுக்கு வந்தனர். பிளாட்பாரத்தில் முத்துமாரியை உட்கார வைத்து விட்டு ஆட்டோவைத் தேடினர். ஆனால் ஒரு ஆட்டோவும் வரவில்லை.
இதையடுத்து 108 ஆம்புலன்ஸுக்குப் போன் போட்டனர். இந்த நிலையில் முத்துமாரியால் வலி தாங்க முடியவில்லை. மேலும் அவருக்கு குழந்தை பிறக்கும் அறிகுறிகளும் தென்பட ஆரம்பித்தன.
இதையடுத்து குடிசைப் பகுதிகளில் வசித்து வரும் பெண்கள் திரண்டு வந்தனர். நடு ரோட்டிலேயே முத்துமாரியைப் படுக்க வைத்தனர். பின்னர் பெண்கள் அனைவரும் சூழ்ந்து நின்று கொண்டனர். அதன் பின்னர் முத்துமாரிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
சினிமாவில் சரியாக சண்டையெல்லாம் முடிந்ததும் போலீஸ்காரர்கள் திமுதிமுவென வந்து வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடுவார்களே அதேபேல 108 ஆம்புலன்ஸும், சரியாக குழந்தை பிறந்ததும் வந்து சேர்ந்தது.
இதையடுத்து தாயையும், சேயையும் ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதிர்ஷ்டவசமாக தாய்க்கும், சேய்க்கும் பெரிய அளவில் பிரச்சினை இல்லை.












Click it and Unblock the Notifications