அனைத்து இயற்கை வளங்களையும் ஏலத்தில் விட முடியாது: மத்திய அரசு
டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழலில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி அனைத்து இயற்கை வளங்களையும் ஏலத்தில் விற்பனை செய்வது பல்வேறு குழப்பங்களுக்கு வழிவகுக்கும். அதனால், அந்தத் தீர்ப்பைத் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு உச்ச நீதிமன்றத்துக்கு உள்ளது'' என்று அட்டர்னி ஜெனரல் வாகனவதி வாதிட்டார்.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் 122 உரிமங்களை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியிருந்தது. மேலும் அனைத்து இயற்கை வளங்களையும் ஏலம் மூல விடலாம் என்றும் உச்சநீதிமன்றம் அத்தீர்ப்பில் கூறியிருந்தது. இத்தீர்ப்புக்கு குடியரசுத் தலைவர் மூலம் மத்திய அரசு விளக்கம் கோரியிருந்தது. இந்த விளக்க மனுவை விசாரணைக்கு ஏற்பது தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதி ஜெயின் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு பரிசீலனை செய்து வருகிறது.
இந்த வழக்கில் குடியரசுத் தலைவர் மூலம் விளக்கம் கோரும் மனு குறித்து நேற்று 7-வது நாளாக விசாரணை நடைபெற்றது. அப்போது அட்டர்னி ஜெனரல் வாகனவாதி வாதிட்டதாவது:
அனைத்து இயற்கை வளங்களையும் இப்படித்தான் ஏலத்தில் விட வேண்டும் என்று ஒரு வரம்பை நிர்ணயித்து மத்திய அரசு செயல்பட முடியாது. ஏனெனில் இயற்கை வளங்களின் பயன்பாடு என்பது சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் மாறக்கூடியது.
பயன்பாடுகளைப் பொறுத்து எது வர்த்தகம், எது பொதுபயன்பாடு என்பதை மத்திய அரசுதான் தீர்மானிக்க வேண்டும். பொதுபயன்பாட்டுக்காக ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை ஏலத்தில்விடலாம் என்பது ஏற்கத்தக்கது. ஆனால் அப்போதைய சூழ்நிலையில் ஏலத்தில் விட வாய்ப்பு இல்லாமல் இருந்தது. அதற்காக வாயு, எரிசக்தி உள்ளிட்ட அனைத்து இயற்கை வளங்களையும் ஏலத்தில் விடுவது என்று பொதுவாக தீர்ப்பளிப்பது ஏற்புடையது அல்ல. இதனால்தான் குடியரசுத் தலைவர் மூலம் விளக்கம் கோரும் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது என்றார்.
இதைக் கேட்ட நீதிபதிகள் இன்றும் வாகனவதி தமது வாதத்தைத் தொடர அனுமதித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications