வாலிபரை கொன்ற இன்ஸ்பெக்டரை கைது செய்ய வைகோ- ராமதாஸ் கோரிக்கை
நெல்லை : நாங்குநேரி அருகே வாலிபரை சுட்டுக்கொலை செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நெல்லை மாவட்டம் நாங்குநேரி காவல்துறை ஆய்வாளர் விஜயகுமார், மறுகால் குறிச்சி கிராமத்தை சேர்ந்த வானமாமலை என்பவரை செவ்வாய்கிழமை மதியம் பிஸ்டலால் சுட்டதில் சம்பவ இடத்திலேயே அந்த வாலிபர் உயிரிழந்தார்.
கடந்த 2 நாட்களாக வானமாமலையின் தம்பி முருகனை மணல் கடத்தலில் வழக்கு போடுவேன் என்று மிரட்டியதோடு, காவல்துறை அதிகாரி அவரிடத்தில் இருந்து பணத்தையும் பறிமுதல் செய்ததாக தெரிகிறது. 22-ந்தேதி அதிகாலையில் முருகனின் வீட்டில் நுழைந்து, இதே காவல்துறை அதிகாரி கைது செய்து வழக்குப் போட்டு சிறையில் அடைத்துள்ளார். நியாயம் கேட்ட வானமாமலையை அப்போதே இந்த காவல்துறை அதிகாரி மிரட்டி உள்ளார்.
இந்த நிலையில் செவ்வாய்கிழமை மறுகால்குறிச்சி ஊரில் அய்யன் செங்கமல உடையார் கோவில் வளாகத்தில் நின்று கொண்டிருந்த வானமாமலையை மிரட்டி போலீஸ் வேனில் ஏற்ற முயற்சித்தபோது என் மீது எந்த குற்றமும் இல்லை என்று வானமாமலை பதில் வாதம் செய்துள்ளார். உன்னை சுட்டுக் கொன்று விடுவேன் என்று ஆய்வாளர் விஜயகுமார் மிரட்டியபோது, என் மீது எந்த தவறும் இல்லையே, சுடுவதாக இருந்தால் சுடுங்கள் என்று பதில் சொன்னவுடன் காவல் துறை ஆய்வாளர் விஜயகுமார் தனது சேவை பிஸ்டலை எடுத்து நெஞ்சுக்கு நேராக சுட்டு இருக்கிறார். அதில் இடதுபுற மார்பில் குண்டு பாய்ந்து முதுகு வழியாக குண்டு வெளியேறி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து வானமாமலை பலியானார்.
ஈவு இரக்கமற்று காட்டுமிராண்டித்தனமாக வானமாமலையை சுட்டுக் கொன்ற காவல்துறை ஆய்வாளர் விஜயகுமார் மீது கொலை வழக்குப்பதிவு செய்து உடனடியாக கைது செய்து சட்டப்படியான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். இந்த சம்பவம் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதியின் நீதி விசாரணைக்கு ஆணை பிறப்பிக்க வேண்டும்.
வானமாமலையின் குடும்பத்திற்கு உரிய நிவாராண நிதி வழங்குவதோடு பெரும் துன்பத்திற்கு ஆளாகிவிட்ட அவரது மனைவி மஞ்சுவிற்கு சத்துணவுத் துறையிலாவது, வேறு துறையிலாவது வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசை வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
வேலியே பயிரை மேய்கிறது-ராமதாஸ்:
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், வானமாமலை என்ற இளைஞரை, மணல் கடத்தலில் ஈடுபட்டதாக கூறி காவல்துறையினர் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். மனித உரிமைகளுக்கு சற்றும் மதிப்பளிக்காத காவல்துறையினரின் இந்த வெறித்தனமான செயல் கண்டிக்கத்தக்கது.
சுட்டுக் கொல்லப்பட்ட வானமாமலை மீது எந்த வழக்கும் இருப்பதாக தெரியவில்லை. மணல் கடத்தலில் ஈடுப்பட்டதாக அவரது சகோதரர் கைதுசெய்யப்பட்ட விவகாரத்தில் வானுமாமலைக்கும், நாங்குநேரி காவல்துறை ஆய்வாளர் விஜயக்குமார் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் செவ்வாய்கிழமை மாலை பொதுமக்கள் முன்னிலையில் வானமாமலையை காவல் ஆய்வாளர் விஜயக்குமார் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ளார்.
தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த ஓராண்டில் மட்டும் 6 பேர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்; 12 பேர் காவல்நிலையங்களில் ஐயத்திற்கு இடமான வகையில் உயிரிழந்துள்ளனர்; 5 பெண்கள் காவல்துறையினரால் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவேண்டிய காவல்துறை என்ற வேலி, அப்பாவி மக்கள் என்ற பயிரை எவ்வாறு மேய்கிறது என்பதற்கு இதை விட சிறந்த உதாரணம் இருக்க முடியாது.
பொதுமக்கள் முன்னிலையில் அப்பாவி ஒருவரை சுட்டுக்கொன்ற காவல்துறை ஆய்வாளர் விஜயக்குமார் மீது கொலை வழக்குபதிவு செய்து அவரை கைது செய்யவேண்டும். இப்படுகொலை குறித்து நீதி விசாரணை நடத்தவேண்டும். கொல்லப்பட்ட வானமாமலையின் குடும்பத்திற்கு ரூ.10 இலட்சம் இழப்பீடு வழங்குவதுடன், அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications