பாபநாசம், பாணதீர்த்த அருவிக்கு செல்ல திடீர் தடை: சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி
நெல்லை: புலிகள் சரணாலாய பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்ற உத்தரவிட்டது. இதையடுத்து களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பாக பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேசிய விலங்கான புலிகள் இனத்தை பாதுகாக்க வேண்டும் என்றால் புலிகள் சரணாலயங்களில் அமைக்கப்பட்டுள்ள கடைகள், கட்டிடங்கள் உள்ளிட்ட வர்த்தக மையங்களை அகற்ற வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர் அஜய் துபே என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அவரது வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், புலிகள் சரணாலயத்தை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக 3 வாரத்திற்குள் அறிவிக்குமாறு மாநிலங்களுக்கு உத்தரவிட்டது.
இந்த கெடு முடிந்தும் புலிகள் சரணாலயப் பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்காத தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு நேற்று முன்தினம் ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கும் வரை புலிகள் சரணாலயத்தின் உள்பகுதிக்கு யாரும் சுற்றுலா செல்ல அனுமதிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது குறித்து நெல்லையில் களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பக இயக்குனர் பொறுப்பு சண்முக சுந்தரம், இணை இயக்குனர் சேகர் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
உச்ச நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்துவது என்று அவர்கள் முடிவு செய்தனர். அதன்படி உச்ச நீதிமன்றத்தில் இருந்து மறு உத்தரவு வரும்வரை களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
களக்காடு புலிகள் காப்பகத்தில் செங்கல்தேரி, தலையணை, தேங்காய்உருளி, நம்பி கோயில் உள்ளிட்ட இடங்களும், முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் அகஸ்தியர் அருவி, பாணதீர்த்த அருவி, சொரிமுத்து அய்யனார் கோவில், மாஞ்சோலை உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் இனிமேல் செல்லக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications