சென்னையில் உள்ள அத்தனை ஜியோன் பள்ளிகளும் மூடல்!
சென்னை முடிச்சூரில் ஜியோன் பள்ளிக்கூட பேருந்து சென்று கொண்டிருந்தபோது பேருந்தின் ஓட்டையிலிருந்து கீழே விழுந்து அதே பேருந்தின் சக்கரம் ஏறி தலை நசுங்கி 2ம் வகுப்பு படித்து வந்த ஸ்ருதி என்ற சிறுமி கொடூரமாக பலியானாள்.
இந்த சம்பவம் சென்னை மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட ஜியோன் பள்ளி மீது மக்கள் கடும் கோபத்துடன் உள்ளனர். பள்ளியில் பெருமளவில் பஸ் கட்டணம் வாங்கியபோதும், இப்படி ஓட்டையான பஸ்களை ஓட்டி, மாணவ, மாணவிகளின் உயிருடன் பள்ளி நிர்வாகம் விளையாடி விட்டதே என்று அனைவரும் ஆதங்கத்துடன் உள்ளனர்.
இந்த நிலையில் ஸ்ருதி மரணத்தைத் தொடர்நது ஜியோன் பள்ளிகள் அனைத்தும் நேற்று மாலையே சீக்கிரமே மூடப்பட்டன. இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. சென்னை கிழக்கு தாம்பரம் சேலையூரில் உள்ள மெயின் ஸ்கூல், செம்பாக்கம், மாடம்பாக்கம், சிட்லபாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள கிளைப் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
பள்ளிக்கூடத்திற்குச் சொந்தமான 50க்கும் மேற்பட்ட பஸ்களை ஆங்காங்கு பள்ளி வளாகத்திலும், பிற இடங்களிலும் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். பஸ் டிரைவர்கள், கிளீனர்களை வீட்டுக்குப் போக அனுமதிக்காமல் பஸ்களிலேயே நேற்று இரவு தங்க வைத்தனர். பாதுகாப்பு கருதி, பள்ளிக்கள் வெளியாட்களை அனுமதிக்காமல் உள்ளனர்.
பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது தெரியாமல் பள்ளிக்கு இன்று காலை வந்த மாணவ, மாணவிகள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பிச் சென்றனர்.