இங்கிலாந்தில் கேட்டதைவிட 2 மடங்கு பணம் தந்த ஏ.டி.எம்: குவிந்த மக்கள்
லண்டன்: இங்கிலாந்தில் உள்ள லாய்ட்ஸ் வங்கியின் ஏ.டி.எம். இயந்திரம் ஒன்றில் எடுக்க முயன்ற பணத்தை விட இரண்டு மடங்கு கிடைத்துள்ளது.
இங்கிலாந்தி்ன் இப்ஸ்விச் பகுதியின் நேக்டன் ரோட்டில் லாய்ட்ஸ் வங்கியின் ஏ.டி.எம். மையம் ஒன்று உள்ளது. அந்த ஏ.டி.எம். மையத்திற்கு கடந்த செவ்வாய்க்கிழமை சென்றவர்கள் தாங்கள் எடுக்க வேண்டிய பணத்திற்கு இரண்டு மடங்காக இயந்திரம் பணம் கொடுத்ததால் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் அப்பகுதியில் காட்டுத்தீ போன்று பரவியது.
இதையடுத்து அந்த மையத்தின் முன்பு மக்கள் கூட்டம் கூடிவிட்டது. அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு பணம் எடுத்தனர். சுமார் 30 பேர் வரை இரட்டிப்பு பணத்தை எடுத்துள்ளனர். இதற்கிடையே மக்கள் கூட்டத்தில் மோதல் ஏற்பட்டது. உடனே இது குறித்து அங்கிருந்த ஒருவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீசார் வந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்ததுடன் வங்கி ஊழியர்களுக்கும் தகவல் கொடுத்தனர்.
வங்கி ஊழியர்கள் வந்து இயந்திரத்தை ஆஃப் செய்யும் வரை போலீசார் அங்கேயே இருந்தனர்.
இது குறித்து இப்ஸ்விச்சைச் சேர்ந்த எம்மா ஹட்சின்சன் கூறுகையில்,
எனது தோழி என்னை செல்போனில் தொடர்பு கொண்டு ஏ.டி.எம். இயந்திரம் கேட்டதை விட இரண்டு மடங்கு பணம் தருகிறது என்று கூறினாள். என் தோழி 40 பவுண்ட் கேட்டதற்கு இயந்திரத்தில் இருந்து 80 பவுண்ட் வந்துள்ளது என்றார்.
லாய்ட்ஸ் வங்கியின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், நேக்டன் ரோட்டில் உள்ள ஏ.டி.எம். சிறிது நேரத்திற்கு கூடுதலாக பணத்தை தந்துள்ளது. தற்போது அதை நிறுத்திவிட்டோம். இந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications