அன்னா ஹசாரே குழு உண்ணாவிரதப் போராட்டம்- 'கரையும்' ஆதரவாளர்கள் கூட்டம்
டெல்லி: ஊழலுக்கு எதிராக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குழுவினர் டெல்லியில் நடத்தி வரும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
ஊழல் குற்றம்சாட்டப்பட்ட 15 அமைச்சர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும், ஊழல் குற்றச்சாட்டுகளுக்குள்ளாகியிருக்கும் எம்.பிக்கள் மீது விசாரணை நடத்த தனி விரைவு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அன்னா ஹசாரே குழுவினர் நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். முதல் நாளில் 2ஆயிரம் முதல் 3 ஆயிரம் பேர் வரை கலந்து கொண்டனர். 2-வது நாளில் இந்தக் கூட்டம் அப்படியே பாதிக்கும் குறைவானது. மொத்தமே 600 பேர் வரைதான் இருந்தனர். 3வது நாளான இன்று வெள்ளிக்கிழமையன்று இன்னும் குறைவாகவே கூட்டம் இருந்து வருகிறது. 300 பேர் வரையில்தான் இன்றைய உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கின்றனர்.
அன்னா ஹசாரேவும் சில ஆதரவாளர்களும் மேடையில் இருக்கின்றனர். கிரண் பேடி தமக்கு புனேயில் வேலை இருக்கிறது என்று கூறிவிட்டார். கெஜ்ரிவாலுக்கு உடல்நலக் குறைவு என்று கூறப்படுகிறது.
பெண் பத்திரிகையாளர்களிடம் சில்மிஷம்
இதனிடையே ஹசாரே குழுவினரின் உண்ணாவிரதப் போராட்டத்தை பதிவு செய்ய வந்த பெண் பத்திரிகையாளர்களிடம் சிலர் சில்மிஷத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இது தொடர்பாக போலீசாரிடம் புகார் செய்யப்பட்டது. ஆனால் அன்னா ஹசாரே குழுவினர் வெளிநபர்கள்தான் இச்செயலில் ஈடுபட்டிருப்பர் என்று கூறினர். சிறிது நேரத்தில் சில்மிஷ நபரை பத்திரிகையாளர்களே கையும் களவுமாக பிடித்து அன்னா குழுவிடம் ஒப்படைத்தனர்.












Click it and Unblock the Notifications