இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 23 தமிழக மீனவர்கள் விடுதலை
மன்னார்: இலங்கை கடற்படையால் நடுக்கடலில் சிறைபிடிக்கப்பட்ட 23 தமிழக மீனவர்கள் இன்று காலை விடுதலை செய்யப்பட்டுள்ளன.
ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 21-ந் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் 23 பேரை இலங்கை கடற்படை நடுக்கடலில் வழிமறித்து கைது செய்தது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு இலங்கை போலீசிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அனைவரையும் ஆகஸ்ட் 6-ந் தேதி வரை சிறையில் அடைக்க மன்னார் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இருப்பினும் தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் தமிழகக் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் இலங்கை தூதரை நேரில் அழைத்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் இன்று காலை மன்னார் நீதிமன்றத்தில் தமிழக மீனவர்களை விடுதலை செய்வதற்கான பரிந்துரைக் கடிதம் திடீரென தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் மன்னாருக்கு அழைத்துவரப்பட்டனர். அவர்கள் இந்தியத் தூதரிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு ராமேஸ்வரத்துக்கு அனுப்பி வைக்கப்படுவர்.