என்ஜினியரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய அதிமுக ஒன்றிய செயலாளர் தலைமறைவு: போலீஸ் வலைவீச்சு
நெல்லை: நெல்லை அருகே மனைவி பெயருக்கு டென்டர் ஒதுக்கக் கோரி என்ஜினியரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய நான்குநேரி ஒன்றிய அதிமுக செயலாளர் ஆர்.எஸ். முருகன் மீது போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே அவர் தலைமறைவாகிவிட்டார்.
நெல்லை தாமிரபரணி வடிநில கோட்ட பொதுப்பணித்துறை அலுவலக செயற்பொறியாளர் சந்திரசேகரன். அவர் நெல்லை மாநகரப் போலீஸ் கமிஷனர் கருணாசாகரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
கடந்த 18ம் தேதி நான் அலுவலகத்தில் இருந்தபோது அதிமுக பிரமுகர் ஆர்.எஸ்.முருகன் என்பவர் உள்பட சிலர் எனது அறைக்குள் அத்துமீறி நுழைந்தனர். அப்போது ஆர்.எஸ்.முருகன், தாமிரபரணி வடிகால் மற்றும் கண்மாய் பராமரிப்பு பணிக்கான டென்டரை தனது மனைவி சிந்துவுக்கு தான் கொடுக்க வேண்டும் என்றும், மற்ற யாருக்கும் கொடுக்கக் கூடாது என்றும், அப்படிக் கொடுத்தால் உன்னைக் கொலை செய்துவிடுவேன் என்று கூறி துப்பாக்கியை காட்டி மிரட்டி என்னை சுட வந்தார். அப்போது மேஜையின் கீழ் பதுங்கிக் கொண்டதால் நான் உயிர் தப்பினேன்.
எனவே, ஆர்.எஸ்.முருகன் உள்ளிட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுத்து எனக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கமிஷனர் கருணாசாகர் உத்தரவின்பேரில் பாளை இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் இந்த மனு குறித்து விசாரணை நடத்தினார். விசாரணையில், நெல்லை தாமிரபரணி வடிநில கோட்ட பொதுப்பணித்துறை அலுவலக செயற்பொறியாளர் சந்திரசேகரனை அதிமுக பிரமுகர் ஆர்.எஸ்.முருகன் மற்றும் அவருடன் வந்தவர்கள் மிரட்டியது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து ஆர்.எஸ்.முருகன் மற்றும் அவருடன் வந்த சிலர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தகவல் அறிந்த ஆர்.எஸ்.முருகன் தலைமறைவாகிவிட்டார். அவரைப் போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.