டிரான்ஸ்பர் விவகாரம்: தென்காசி அருகே சப்- இன்ஸ்பெக்டரை குத்திக் கொன்ற ஏட்டு

தென்காசி அருகே உள்ள சுரண்டை காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிந்தவர் இசக்கி முத்து(56). அதே காவல் நிலையத்தில் ரைட்டராக பணி புரிந்தவர் சண்முகராஜா(46). அவர்கள் இருவரும் காவல் நிலையம் அருகே வீடு எடுத்து தங்கி இருந்தனர். இந்நிலையில் சண்முகராஜா சுத்தமல்லிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
தான் சுத்தமல்லிக்கு மாற்றல் ஆனதற்கு இசக்கி முத்து தான் காரணம் என்று நினைத்த சண்முகராஜா அவரிடம் சுரண்டை காவல் நிலையத்தில் வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருவரும் கட்டிப் புரண்டுள்ளனர். இந்நிலையில் நேற்று சண்முகராஜாவை பாதுகாப்பு பணிக்காக பத்தமடைக்கு அனுப்பியுள்ளனர். ஆனால் அவர் அங்கு செல்லாமல் மது அருந்திவிட்டு சுரண்டை காவல் நிலையத்திற்கு சென்றார். அப்போது இசக்கி முத்து அங்கில்லாததால் காவல் நிலையம் அருகே உள்ள வீட்டுக்கு சென்றார்.
அங்கு இசக்கு முத்துவை பார்த்ததும் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரைக் குத்தினார். இசக்கி முத்துவின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடி வரவே சண்முகராஜா அங்கிருந்து தப்பியோடிவிட்டார். அங்கு வந்த மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவரை சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவி்ட்டார்.
இச்சம்பவம் நெல்லை மாவட்ட காவல் துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை சரக காவல் துறை தலைவர் வரதராஜு, நெல்லை மாவட்ட கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதாரி ஆகியோர் பாளையம்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டு தப்பி ஓடிய ஏட்டு சண்முகராஜாவை கைது செய்ய தனிப்படை அமைத்து உத்தரவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications