அடுத்தடுத்து கல்யாணம்.. பிரபல தொழிலதிபர் மீது முதல் மனைவி போலீஸில் புகார்!
சென்னை சோழிங்கநல்லூர் அருகே டயமன்ட் என்ஜீனியரிங் என்ற தொழில் குழுமம் உள்ளது. இந்த நிறுவனத்திற்கு ஐந்து தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு மொத்தம் 4000க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். வருடத்திற்கு ரூ. 800 கோடி அளவுக்கு வருவாய் ஈட்டி வரும் பெரிய நிறுவனம் இது.
இந்த நிறுவனத்தின் அதிபராக இருப்பவர் மோகன்ராஜ், தூத்துக்குடியைச் சேர்ந்தவர். இவரது மனைவி ஜெயந்தி. இவர் இன்று சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு தனது வக்கீல்களுடன் வந்து ஒரு புகார் கொடுத்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனது கணவர் மோகன் ராஜ். அவருக்கு சொந்தமாக டயமன்ட் என்ஜீனியரிங் நிறுவனம் சோழிங்கநல்லூரில் உள்ளது. அங்கு 4000 பேருக்கு மேல் வேலை பார்க்கிறார்கள். வருடத்திற்கு ரூ. 800 கோடிக்கும் மேல் டர்ன் ஓவர் உள்ளது. அவருக்கு சொந்தமாக மட்டும் ரூ. 20,000 கோடிக்கு மேல் சொத்துக்கள் உள்ளன.
எனது கணவரின் முதல் மனைவி நான். எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஆனால் என்னை விவாகரத்து செய்யாமல், 2 கல்யாணங்களை அவர் செய்துள்ளார். மேலும் பல பெண்களுடன் அவருக்குத் தொடர்பும் உள்ளது.
அவர் எத்தனை பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தாலும் அதுகுறித்து நான் கவலைப்படவில்லை. ஆனால் என்னை விவாகரத்து செய்யாமல் அவர் இப்படி அடுத்தடுத்து கல்யாணம் செய்து வருவது சட்டவிரோதமானது. மேலும், தனது 2 மற்றும் 3வது மனைவிகள் மூலம் எனக்குச் சேர வேண்டிய சொத்துக்களையும் அபகரிக்க முயல்கிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி புகார் கொடுத்துள்ளேன் என்றார்.
ஜெயந்தியின் வக்கீல் கூறுகையில், இதுகுறித்து மோகன்ராஜிடம் கேட்டால், எங்கு வேண்டுமானாலும் போய் புகார் கொடுத்துக் கொள் என்று பேசுகிறார். தூத்துக்குடியிலிருந்து ஆட்களை வரவைத்து கொன்று விடுவேன் என்று மிரட்டுகிறார் என்றார்.
இந்தப் புகார் மீ்து நடவடிக்கை எடுக்குமாறு அண்ணா நகர் போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.