காவிரியை வைத்து அரசியல் செய்கிறார்கள்... சொல்கிறார் உமா பாரதி
சென்னை: காவிரிப் பிரச்சினை முற்றிலும் அரசியல் பிரச்சினையாகியுள்ளது. அதை வைத்து அரசியல் செய்ய சில அரசியல்வாதிகள் விரும்புகிறார்கள் என்று பாஜக மூத்த தலைவர் உமா பாரதி கூறியுள்ளார்.
ஆனால் அரசியல் செய்வது தமிழக அரசியல்வாதிகளா அல்லது கர்நாடக அரசியல்வாதிகளா அல்லது இரு மாநில அரசியல்வாதிகளுமா என்பதை அவர் விளக்கவில்லை.
சென்னை வந்த உமா பாரதி, பாஜக தலைமைக் கழக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், காவிரிப் பிரச்சினை முற்றிலும் அரசியல் பிரச்சினையாகி விட்டது. சில அரசியல்வாதிகள் இதை வைத்து மக்களின் உணர்வுகளுடன் விளையாடப் பார்க்கின்றனர். வாக்கு வங்கியை மனதில் கொண்டே இப்படிச் செய்கிறார்கள். இல்லாவிட்டால் எப்போதோ இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டிருக்கும்.
நான் முன்பு முதல்வராக இருந்தபோது நதி நீர் இணைப்புத் திட்டத்துக்கு முழு ஆதரவு தெரிவித்து முயன்று வந்தேன். ஆனால் மத்தியில் பாஜக ஆட்சி மாறியதும், காங்கிரஸ் கூட்டணி அரசு அதை கிடப்பில் போட்டு விட்டது.
சேது சமுத்திரத் திட்டம் ராமர் பாலத்துக்கு ஆபத்தானது. அதை ஏற்க முடியாது. முன்பு ராமர் பாலத்தை இடிக்க ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இப்போதும் அவர் தனது எதிர்ப்பில் தீவிரமாக இருக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன் என்றார் உமா பாரதி.












Click it and Unblock the Notifications