நாகை தேமுதிக மாவட்டச் செயலாளருக்கு அடி உதை: கார் உடைப்பு
நாகை: வேளாங்கண்ணி அருகே நாகை தேமுதிக மாவட்டச் செயலாளர் அனீஸ் பாண்டியன் மீது சிலர் தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை தெற்கு மாவட்ட தேமுதிக செயலாளராக இருப்பவர் வேதாரண்யத்தைச் சேர்ந்த அனீஸ் பாண்டியன் (36). அவர் கட்சி பணிக்காக நாகப்பட்டினம் சென்றுள்ளார். பின்பு அங்கிருந்து வேதாரண்யத்திற்கு காரில் திரும்பிச் சென்று கொண்டிருந்தார்.
வேளாங்கண்ணி அருகே உள்ள பரவையில் உள்ள ஹோட்டலில் சாப்பிட தனது காரை நிறுத்தினார். அப்போது அங்கிருந்த மோட்டார் சைக்கிளில் அனீஸ் பாண்டியனின் கார் உரசியதாகக் கூறப்படுகிறது. இதனால் தெற்கு பொய்கை நல்லூரைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவருக்கும், அனீஸ் பாண்டியனுக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. இதில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். தாக்குதலில் இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதைப் பார்த்த அங்கிருந்த மக்கள் ஓடி வந்து அவர்கள் இருவரையும் விலக்கிவி்ட்டு அவர்களை நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே அனீஸ் பாண்டியனின் காரை சிலர் அடித்து நொறுக்கினர்.
இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அவர்களது புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் இரு தரப்பு மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.












Click it and Unblock the Notifications