ஆந்திராவில் கடனை அடைக்க 2 வயது குழந்தையை ரூ.22,000க்கு விற்ற பெற்றோர்
ஹைதராபாத்: ஆந்திராவில் கடன் பிரச்சனையைத் தீர்க்க பெற்றோர் தங்களது 2 வயது ஆண் குழந்தையை ரூ.22,000க்கு விற்பனை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள கிரமாத்தைச் சேர்ந்த கூலி வேலை செய்யும் தம்பதிக்கு 3 குழந்தைகள். அவர்கள் வாங்கும் கூலியை வைத்து குடும்பம் நடத்த கஷ்டப்பட்டனர். கடன் வாங்கி குடும்ப செலவுகளைக் கவனித்து வந்தனர். இதையடுத்து தங்களது மூன்றாவது குழந்தை அதாவது 2 வயது மகனை விற்றுவிடலாம் என்று தீர்மானித்தனர். அதன்படி தங்கள் மகனை ஒரு வசதியான தம்பதிக்கு ரூ.22,000க்கு விற்றுவிட்டனர்.
அவர்கள் கடந்த 10 நாட்களுக்கு முன்பே குழந்தையை விற்றுவிட்டனர். ஆனால் விற்ற குழந்தை மீட்டுத் தருமாறு அவர்கள் போலீசாரிடம் புகார் கொடுத்தபோது தான் இந்த சம்பவம் வெளிச்சத்தி்ற்கு வந்தது.
அவர்கள் குழந்தையை விற்றது தெரிந்து அக்கம்பக்கத்தினர் அவர்களை திட்டித்தீர்த்தனர். இதையடுத்து தங்கள் குழந்தையை திருப்பித் தருமாறு அந்த தம்பதியிடம் கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர். ரூ.30,000 தருகிறோம் எங்கள் குழந்தையை கொடுத்துவிடுங்கள் என்று அவர்கள் கேட்டும் அந்த வசதி படைத்த தம்பதி ஒப்புக்கொள்ளவில்லை.
இதையடுத்து தான் அவர்கள் போலீசின் உதவியை நாடினார்கள். போலீசார் குழந்தையை விலைக்கு வாங்கிய நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.