துணை ஜனாதிபதித் தேர்தலில் அதிமுக, பிஜூ ஜனதா தளம் ஆதரிக்கும்: ஜஸ்வந்த்சிங்
டெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் அதிமுக மற்றும் பிஜூ ஜனதா தளம் கட்சிகள் தம்மை ஆதரிக்கும் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் ஜஸ்வந்த்சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றுக்கு ஜஸ்வந்த்சிங் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
குடியரசுத் தலைவர் தேர்தலில் பி.ஏ. சங்மாவை அ.தி.மு.க.வும் பிஜு ஜனதா தளமும் ஆதரித்தன. அதே கட்சிகள் என்னையும் ஆதரிக்கும் என நம்புகிறேன்.
தற்போதைய மத்திய அரசின் முடிவெடுக்கும் நடைமுறை சர்வாதிகாரத் தன்மை வாய்ந்ததாக உள்ளது. நாங்கள் ஆட்சி நடத்தியபோது ஆலோசனை நடத்தித்தான் எந்த முடிவையும் எடுத்து வந்தோம்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. இந்தத் தேர்தலில் எந்தக் கட்சியும் கொறடா விதிக்க முடியாது. கட்சி தாவல் தடைச் சட்டம் பொருந்தாது. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து எந்தக் கட்சியும் தனது உறுப்பினர்களுக்கு கட்டளை பிறப்பிக்க முடியாது.
நான் குடியரசு துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், நாடாளுமன்ற நிலைக் குழுக்களின் கூட்டத்தை ஊடகங்களில் நேரலையாகக் காட்டுவதற்கு முயற்சி மேற்கொள்வேன். ஒரு சமத்தன்மையைக் காண வேண்டிய அவசியம் உள்ளது.
குடியரசு துணைத் தலைவர் என்பவர் எம்.பி.க்களின் தலைவரோ அல்லது கண்காணிப்பாளரோ அல்லர். நாடாளுமன்றம் என்பது பிரசாரத்துக்கான இடமல்ல. நாடாளுமன்றத்தின் அடிப்படைப் பணி சட்டமியற்றுதல் மட்டும்தான் என்றார் ஜஸ்வந்த் சிங்.












Click it and Unblock the Notifications