நாங்களும் அரசியல் பண்ண போறோம்: உண்ணாவிரதத்தை நாளை கைவிடுகிறோம்- அன்னா குழு

ஊழலுக்கு எதிராகவும், வலுவான லோக்பால் மசோதா வேண்டியும் அன்னா குழுவினர் கடந்த 25ம் தேதி முதல் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அன்னா ஹசாரேவும் கடந்த 29ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகிறார். 9 நாட்களாக தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வரும் அன்னா குழு உறுப்பினர்களான அரவிந்த் கெஜ்ரிவால், கோபால் ராய் மற்றும் மனீஷ் சிசோடியா ஆகியோரின் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது.
அவர்களை உண்ணாவிரதத்தை கைவிட்டுவிட்டு மருத்துவமனையில் சேருமாறு டெல்லி போலீஸ் வலியுறுத்தியும் அவர்கள் அதை கேட்கவில்லை. லோக்பால் மசோதா நிறைவேறும் வரை உண்ணாவிரதத்தை கைவிடும் பேச்சுக்கே இடமில்லை என்று அடம் பிடித்தனர். அவர்கள் என்ன தான் அடம் பிடித்தாலும் மத்திய அரசு அவர்களைக் கண்டுகொள்ளவே இல்லை.
இதையடுத்து மத்திய அரசுடன் போராடுவதை விட தாங்களே கட்சி துவங்கலாம் என்று அன்னா குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அரசியலில் குதிக்க முடிவு செய்துள்ள அவர்கள் தங்களின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நாளை மாலை 5 மணியுடன் முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.
உண்ணாவிரதம் இருந்து நம்முடைய மூச்சும், ஆவியும் தான் போகின்றதே தவிர கோரிக்கையை மத்திய அரசு கேட்க்க கூடத் தயாராக இல்லை என்பதை உணர்ந்த அன்னா குழு இந்த முடிவை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போ அரசியலுக்கு வரலாமா?: மக்களிடம் கருத்து கேட்கிறது அன்னா குழு:
இந் நிலையில் அன்னா ஹசாரே குழுவினர் சமூக வலைதளமான டிவிட்டரில் மாற்று அரசியலை முன்னெடுப்பது பற்றி மக்களிடம் பொது கருத்து கேட்டு வருகின்றனர்.
"நாட்டின் மாற்று அரசியல் சக்தியாக அன்னாஜி களம் இறங்க வேண்டிய தருணம் இதுதானா? என்று அன்னா குழு சார்பில் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. இதேபோல் மற்றொரு இணையதள பக்கத்தில்,
- தற்போதைய அரசியல் கட்சிகள் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?
- நாட்டின் மாற்று அரசியல் சக்தியை அன்னாஜி முன்னெடுக்க வேண்டுமா?
என்று இரு கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன.












Click it and Unblock the Notifications